அயோத்தி ராமர் கோவில் விழாவின்போது ‘ஜெய் ஸ்ரீராம்’ கூறி பரிசு வழங்கிய பூனம் பாண்டே!
டெல்லி: பாலிவுட் நடிகையும் மாடலுமான பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் காலமானார். அண்மையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு நிகழ்வின்போது, பலருக்கு பரிசுகளை கொடுத்து மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்திருந்தார் பூனம் பாண்டே.
இந்தியாவின் பிரபல நடிகையும் மாடலுமான பூனம் பாண்டே, அவ்வப்போது சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு பிரபலமானவர். கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய அணி கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றால், தான் நிர்வாணமாக மைதானத்தை வலம் வருவேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து, பாலிவுட்டில் நஷா எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர், தனது இணையதளத்தில் கவர்ச்சிப் படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். இதற்கிடையே, கடந்த 2020-ல் சாம் பாம்பே எனும் தயாரிப்பாளரை திருமணம் செய்தார் பூனம். அவருடன் கோவாவுக்கு ஹனிமூன் போகும் போதே கணவர் தன்னை டார்ச்சர் செய்ததாக போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில் தான் திடீரென நேற்று மரணமடைந்துள்ளார் பூனம் பாண்டே. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமாகி இருந்த பூனம் பாண்டே, இளம் வயதிலேயே காலமான சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது, சாலையில் சென்ற அவர் காரில் இருந்து இறங்கி சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும், பரிசுகளை வழங்கி, அயோத்திக்கு ராமர் திரும்புவது பற்றி மகிழ்ச்சி தெரிவித்திருந்தார் பூனம் பாண்டே. பரிசு வழங்கும்போது ஜெய் ஸ்ரீ ராம் என்றும் கூறி இருந்தார்.

அதற்கு முன்னதாக, மகர சங்கராந்தியை ஒட்டி, சாலையோரம் வசிக்கும் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்திருந்தார் பூனம் பாண்டே. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications