நிலக்கரியை வேகமாக கொண்டு போகனும்.. 657 பயணிகள் ரயில்கள் திடீர் ரத்து.. மக்கள் அவதி
டெல்லி: நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மின்உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை தடையின்றி வேகமாக கொண்டு செல்லும் வகையில் மே மாதம் 3வது வாரம் வரை மொத்தம் 657 பயணிகள் ரயில்களை ரத்து செய்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.
இந்தியாவுக்கு தேவையான மின்சாரத்தில் அதிகளவு அனல் மின் நிலையங்களில் இருந்து தான் கிடைக்கிறது. இங்கு மின்சாரம் தயாரிக்க அதிகளவில் நிலக்கரி தேவைப்படுகிறது.
ஒவ்வொரு மாநிலங்களுக்கும் மத்திய அரசு சார்பில் நிலக்கரி அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் தான் தற்போது பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது.

மின்வெட்டால் மக்கள் பாதிப்பு
இதனால் அனல்மின் நிலையங்களின் சில யூனிட்டுகளில் மின்சாரம் தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மின்சாரமும் அறிவிப்பின்றி துண்டிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோடைவெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இத்தகைய மின்வெட்டு மக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுத்துள்ளது. பல மாநிலங்களில் மக்கள் இரவில் மின்சாரம் இன்றி தவிக்கும் நிலையில் தொழிற்சாலைகளும் இயங்காமல் முடங்கியுள்ளன. இதனால் தொழில் இழந்து மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆபத்து நிலையில் டெல்லி
குறிப்பாக உத்தர பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத், ஜார்கண்ட் மக்கள் அறிவிக்கப்படாத மின்வெட்டால் அல்லல்பட்டு வருகின்றனர். டெல்லியில் குறைந்தது 21 நாட்களாவது நிலக்கரி கையிருப்பு இருக்க வேண்டும். ஆனால், ஒரு நாளுக்கும் குறைவான நிலக்கரியே உள்ளது. இதனால் மெட்ரோ மற்றும் அரசு மருத்துவமனை சேவைகள் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. இதேநிலை தான் பிற மாநிலங்களிலும் நிலவி வருகிறது.

ரயிலில் நிலக்கரி
இதனால் தற்போது மத்திய அரசு ஒவ்வொரு இடங்களுக்கும் நிலக்கரி அனுப்பி வருகிறது. கோடைக்காலத்தில் எப்போதும் மின்தேவை அதிகமாகும் என்பதால் நிலக்கரி அனுப்புவதில் மத்திய அரசு வேகம் காட்ட துவங்கியுள்ளது. அனல் மின்நிலையங்களுக்கு நிலக்கரி சரக்கு ரயில்களில் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் சரக்கு ரயில்களில் நிலக்கரியை தங்கு தடையின்றி கொண்டு செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

657 ரயில்கள் ரத்து
அதன்படி நிலக்கரி ஏற்றி செல்லும் சரக்கு ரயில்கள் வேகமாக சென்று வர வசதியாக நாட்டில் தற்காலிகமாக பயணிகள் ரயில்களின் சேவையை நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது மே மாதம் 3வது வாரம் வரை மொத்தம் 657 பயணிகள் ரயில்களின் சேவையை ரத்து செய்யபட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த பயணிகள் ரயில் சேவை ரத்து இன்று முதல் அமலுக்கு வந்தது.

இன்று எத்தனை ரயில்கள் ரத்து
முதல் நாளான இன்று மட்டும் மொத்தம் 42 பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டது. இதனால், நிலக்கரியை கொண்டு செல்லும் சரக்கு ரெயில்கள் விரைவாக சென்றன. இதுபற்றி இந்திய ரயில்வே செயல் இயக்குனர் கவுரவ் கிருஷ்ணா பன்சால் கூறுகையில், ‛‛நிலக்கரியை கொண்டு செல்வதற்காக போர்க்கால சூழலில் நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்து வருகிறோம். ரயில்கள் ரத்து அறிவிப்பு தற்காலிகம் தான். நிலைமை சீரடைந்ததும் மீண்டும் பயணிகள் ரெயில் சேவை இயக்கப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications