நகர்புறங்களில் வீடு கட்ட மானியம்.. ரூ.9 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு.. ரூல்சை மாற்றிய மத்திய அரசு
டெல்லி: பிரதமரின் அவாஸ் யோஜனா (நகர்புறம்) திட்டத்தின் கீழ் வீடு கட்ட கடனுக்கான வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி இனி ஆண்டு வருமானம் ரூ.9 லட்சம் வரை உள்ளவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் இனி பயன்பெற முடியும்.
நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் வீடுகள் கட்டுவதற்காக பிரதமரின் வீடு கட்டும் (நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ் கடனுக்கு வட்டி மானியம் என்ற சலுகை அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான கடனுக்கு மானியம் அளிக்கப்படுகிறது. அதாவது, 200 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வீடு கட்டுவதற்காக வீட்டு கடனில் வட்டி மானியம் அளிக்கப்பட்டு வந்தது.

ஆண்டு வருமானம் ரூ,18 லட்சம் வரை கொண்டவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த திட்டத்தின் கீழ் உள்ள விதிமுறையில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. திருத்தப்பட்ட விதிகளின்படி, இனிமேல் 120 சதுர மீட்டர் பரப்பளவு வரையிலான வீடு கட்ட வீட்டு கடன் பெறுபவர்களுக்கு மட்டுமே வட்டி மானியம் அளிக்கப்படும். இதுமட்டும் இன்றி வருமான உச்ச வரம்பும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது இதற்கு முன்பாக ஆண்டு வருமானம் ரூ. 18 லட்சம் வரையில் உள்ளவர்கள் வீடு கட்டும் திட்டத்தின் (பிஎம் ஏஓய்2.0) கீழ் கடனுக்கு வட்டி மானியம் பெற முடியும் என்ற நிலை இருந்தது. இந்த உச்ச வரம்பானது தற்போது ஆண்டுக்கு ரூ.9 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள், குறைந்த வருவாய் கொண்ட பிரிவினர், நடுத்தர வருவாய் பிரிவினர் ஆகிய தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு மட்டும் இந்த திட்டத்தின் கீழ் பலன் கிடைப்பதற்காகவே இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல, அதிகபட்ச வட்டி மானியம் முன்பு சராசரியாக 2.30 லட்ச ரூபாயாக இருந்தது. தற்போது ரூ.1.8 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இன்றி பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் ஆகியோர் குறைந்த வாடைகையில் தங்குவதற்கான வீடுகள் (ஏஆர்எச்) கட்டுவதற்கான ஊக்கத்தொகை அளிக்கும் புதிய திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், 30 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் ஒரு பெட்ரூம் கொண்ட வீட்டிற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மாநில அரசுகளிடம் இருந்து உதவித் தொகை பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ், சொந்த வீடு வாங்க விரும்பாத , வாங்க முடியாத பொருளாதார சூழலில் உள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்குவதற்கு குறைந்த வாடகை வீடுகளை அதிக அளவில் கட்ட முடியும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது. இத்தகைய வீடுகளை வாடகைக்கு பதிவு செய்ய விரைவில் வெப்சைட் தொடங்கப்படும் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகை மாற்றி அமைக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications