1 ரூபாய் அபராதத்தை கட்ட தயார்.. உச்ச நீதிமன்றத்தை நான் மதிக்கிறேன்.. பிரஷாந்த் பூஷண் பேட்டி!
டெல்லி: 1 ரூபாய் அபராதத்தை கட்ட தயார், மரியாதையுடன் அபராதத்தை கட்ட தயார், என்று மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.அதே சமயம் இந்த தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்வேன், என்று பிரஷாந்த் பூஷண் கூறியுள்ளார்.
Recommended Video
மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று தண்டனை வழங்கப்பட்டது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என ஆகஸ்ட் 14-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆனால் இவருக்கான தண்டனை அப்போது வழங்கப்படவில்லை. மன்னிப்பு கேட்டால் தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் இவருக்கு வாய்ப்பு அளித்தது. ஆனால் இவர் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

செப்டம்பர் 15ம் தேதி
இதையடுத்து இரண்டு வார இடைவெளிக்கு பின் இன்று பிரஷாந்த் பூஷணுக்கு தண்டனை வழங்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பிஆர் கவாய், கிருஷ்ணா முராரி அமர்வு இந்த வழக்கில் தண்டனை வழங்கியது. அதில், பிரஷாந்த் பூஷணுக்கு 1 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. செப்டம்பர் 15ம் தேதிக்குள் 1 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

அபராதம் எவ்வளவு
அபராதம் செலுத்தவில்லை எனில் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் 3 ஆண்டுகள் இவர் வழக்கறிஞராக பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டார் என்று உச்ச நீதிமன்றம் தனது தண்டனையில் குறிப்பிட்டது. இந்த நிலையில் பிரஷாந்த் பூஷண் அளித்த பேட்டியில், நான் 1 ரூபாய் அபராதத்தை கட்ட தயார். எனக்கு 1 ரூபாயை எனது வழக்கறிஞர் மற்றும் நண்பர் ராஜிவ் தவான் அளித்தார்.

அபராதத்தை கட்ட தயார்
மரியாதையுடன் அபராதத்தை கட்ட தயார்.நான் உச்ச நீதிமன்றத்தை மதிக்கிறேன்.ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்விடம் உச்ச நீதிமன்றம். நான் உச்ச நீதிமன்றத்தை அவமதிக்க நினைத்தது இல்லை. உச்ச நீதிமன்றத்திற்கு எதிரான வேதனையை வெளிக்காட்டவே நான் அப்படி பேசினேன். உச்ச நீதிமன்றம் தனது சிறப்பான பாதையில் இருந்து விலகி செல்வதாகவே கருதுகிறேன். அதனால்தான் அப்படி கூறினேன். அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க மக்களுக்கு இந்த சூழ்நிலை வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அநீதி செய்யப்படுகிறது
மக்கள் அநீதிக்கு எதிராக நிற்க விருப்பப்படுகிறார்கள், என்று பிரஷாந்த் பூஷண் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ போப்டே குறித்தும் முன்னாள் தலைமை நீதிபதிகள் மூன்று பேர் குறித்தும் பிரஷாந்த் பூஷன் செய்த டிவிட் காரணமாக இவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு தொடுக்கப்பட்டது. நான்கு முன்னாள் மற்றும் இந்நாள் நீதிபதிகளை கடுமையாக விமர்சனம் செய்து பிரஷாந்த் பூஷன் டிவிட் செய்து இருந்தார். இதனால் உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து இவர் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications