மிஷன் "குஜராத்!" ராகுல் காந்தியை தனியாக சந்தித்த பிரசாந்த் கிஷோர்.. ஒர்க்அவுட் ஆகுமா காங். வியூகம்?
டெல்லி: குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் பிரசார வியூகம் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன,
நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜக மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. பஞ்சாப் தவிர 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருந்த நிலையில், அதை அப்படியே பாஜக தக்க வைத்துக் கொண்டது.
அதேநேரம் மறுபுறம் காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தல் மிகப் பெரிய தோல்வியாக அமைந்தது. பஞ்சாபில் ஆட்சியைக் கோட்டைவிட்ட காங்கிரஸ், மற்ற மாநிலங்களிலும் மோசமான தோல்வியைச் சந்தித்தது.

குஜராத்
இந்தத் தேர்தலில் பெற்ற வெற்றியை வரும் காலத்தில் நடைபெறும் தேர்தல்களிலும் தக்க வைக்க பாஜக திட்டமிடுகிறது. வரும் டிசம்பர் மாதம் குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான தேர்தல் பணிகளை பாஜக ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி, சில நாட்களிலேயே பிரதமர் மோடி குஜராத்தில் மாபெரும் பேரணியில் கலந்து கொண்டார். தேர்தல் பணிகளை பாஜக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத்தை பாஜக கவுரவ பிரச்சினையாகவும் பார்க்கிறது.

ராகுல் உடன் சந்திப்பு
இந்த 5 மாநில தேர்தல் தோல்வி காங்கிரஸை மோசமாகப் பாதித்துள்ளது. காங்கிரஸ் தலைமை குறித்த கேள்விகள் அதிகரித்துள்ள நிலையில், வரும் காலத்தில் தேர்தலை எதிர்கொள்ளும் திட்டங்களிலும் காங்கிரஸ் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த 2017 குஜராத் தேர்தலில் காங்கிரஸ் 77 இடங்களில் வென்ற நிலையில், இந்த முறை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொருத்து தான் பார்க்க வேண்டும். இந்தச் சூழலில் குஜராத் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றுவது தொடர்பாகத் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் உடன் இணையும் பிகே
குஜராத் தேர்தலை மட்டுமே இரு தரப்பும் இணைந்து எதிர்கொள்ளும் என்றும் அடுத்து வரும் காலத்தில் நடைபெறும் தேர்தல்களில் இந்த ஒப்பந்தம் தொடராது என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசிய பிரசாந்த் கிஷோர் இந்தத் திட்டம் தொடர்பாக முன்மொழிந்துள்ளார். இருப்பினும், காங்கிரஸ் தலைமை இது தொடர்பாக எந்தவொரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. குஜராத் காங்கிரஸ் தலைவர்கள் பிரசாந்த் கிஷோருடன் பணியாற்ற ஆர்வமாக இருக்கும் போதிலும், இதில் இறுதி முடிவை ராகுல் காந்தியே எடுப்பார் எனக் கூறப்படுகிறது.

காங்கிரசில் பிரசாந்த் கிஷோர்
கடந்த ஆண்டு பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் இணைவது தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் தீவிரமானது. இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையே சில விஷயங்களில் முறையான உடன்பாடு ஏற்படாததால் கடந்த செப்டம்பர் மாதம் இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் கூட இரு தரப்பினரும் சில ரிஸ்க்குகளை எடுக்க விரும்பாததாலேயே இந்த ஒப்பந்தம் அமையவில்லை என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார். பிரியங்கா காந்தியும் கிட்டதட்ட இதைக் கருத்தைத் தான் தெரிவித்திருந்தார்.

குஜராத் தேர்தல்
இந்த சூழலில் தான் இப்போது குஜராத் தேர்தலில் காங்கிரஸுக்காக பிரசாந்த் கிஷோர் பணியாற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபையில் ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கக் குறைந்தது 92 இடங்களில் வென்று இருக்க வேண்டும். கடந்த 2017 குஜராத் தேர்தலில் பாஜக 99 இடங்களில் வென்றது. அதேபோல காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications