‛‛நீட் முறைகேடு’’.. குற்றவாளிகளை எனது அரசு சும்மாவிடாது.. நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி தந்த உறுதி
டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து அரசு விசாரித்து காரணமானவர்களை தண்டிக்கும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை. இந்த தேர்தலில் 400 தொகுதிகளை வென்று அரசியலமைப்பை மாற்றுவோம் என்று பாஜகவினர் முழங்கியிருந்த நிலையில், அக்கட்சி தனிப்பெரும்பான்மை பெறாதது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இருப்பினும் பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. எனவே பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்திருக்கிறது.

நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையுடன் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அப்போது,
"நீட் போன்ற தேர்வுகளில் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து அரசு விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டித்து தண்டிக்கும். தற்போது உயர்மட்ட விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. வினாத்தாள் கசிவு பிரச்னைக்கு அரசியல் கட்சிகளின் முரண்பாட்டிற்கு அப்பாற்பட்டு தீர்வு எட்டப்பட வேண்டும். தற்போது முறைகேடுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
நீட் தேர்வு குறித்து தமிழக அரசு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், தேசிய அளவில் தற்போது நீட் தேர்வுக்கு எதிராக குரல்கள் எழுந்திருக்கின்றன. இதற்கு காரணம் சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள்தான். அதாவது, தேர்வு எழுதியவர்களில் 1,500 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன. 67 தேர்வர்கள், 720 என்ற முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதற்கு முன்னர் யாரும் இப்படி பெற்றதில்லை. ஒரே மையத்தில் இருந்து அதிகம் பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளதும் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.
எனவே நீட் தேர்வுக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு பணம் பெற்றுக்கொண்டு நடத்தப்படுகிறது. இதில் பல முறைகேடுகள் நடக்கின்றன. சமீபத்திய தேர்வு முடிவுகள் தங்கள் மாநில மாணவர்களுக்கு அநீதியாக அமைந்துள்ளது என்று கூறி, நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில் பீகாரில் நீட் தேர்வின் வினாத்தாள் லீக் ஆகியிருந்த விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது. அதாவது பாட்னாவில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் தேர்வு எழுதிய 12 மாணவர்களுக்கு, முன்கூட்டியே வினாத்தாள் லீக்காகி இருக்கிறது. இதற்காக பெரும் தொகை கைமாறி இருக்கிறது என்பதையும் மாணவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல யுஜிசி நெட் தேர்வு முறைகேடு காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர்வதற்கும் இளநிலை ஆராய்ச்சிக்கான நிதியுதவி பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிப்பதற்காக தேசிய தேர்வு முகமை சார்பில் யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நெட் தேர்வு கடந்த 18ம் தேதி நடைபெற்றது.
ஆனால் இந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து தகவல் கிடைத்திருப்பதாகக் கூறி தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது. நீட் முறைகேடு, அதனை தொடர்ந்து நெட் தேர்வு முறைகேடு என இரண்டு சம்பவங்கள் நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை தூண்டியது.
இந்த பின்னணியில்தான் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நீட் குறித்து பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications