மசோதாக்கள் மீது முடிவு எடுக்க காலக்கெடு.. கேள்வி எழுப்பிய ஜனாதிபதி! 22 ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை
டெல்லி: ஆளுநர்கள் அதிகாரம் தொடர்பான தீர்ப்பு குறித்து ஜனாதிபதி வழியாக மத்திய அரசு விளக்கம் கேட்ட நிலையில், இது தொடர்பான வழக்கை வரும் 22 ஆம் தேதி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது. மசோதா மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்து இருந்தது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் ஜனாதிபதி முடிவு எடுக்க கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அதிரடி தீர்ப்பினை அளித்தது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மசோதக்களை கிடப்பில் போட்டது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது.

14 கேள்விகள்
அதாவது, மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு ஒரு மாதம் வரையும், ஜனாதிபதிக்கு 3 மாதம் வரையும் கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம் கேட்டு இருந்தார். மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்த விவகாரத்தில் 14 கேள்விகள் கேட்டு கூடுதல் விளக்கத்தை கோரியிருந்தார்.
* இந்திய அரசியலமைப்பு சட்டம் 200-வது பிரிவின்படி, மாநில ஆளுநரிடம் ஒரு சட்ட மசோதா சமர்ப்பிக்கப்படும்போது அவருக்கு உள்ள சட்டரீதியான வாய்ப்புகள் என்னென்ன?
* ஒரு மசோதாவை தாக்கல் செய்யும்போது, மாநில அமைச்சரவை வழங்கும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரா?
ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?
* அரசியலமைப்பு வழங்கி உள்ள விருப்பு உரிமையை ஆளுநர் பயன்படுத்துவது நியாயமானதா?
* அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எவ்வித காலக்கெடுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. அப்படி இருக்க, நீதிமன்ற உத்தரவு மூலம் ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?
* மாநில சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலேயே அமலுக்கு கொண்டுவர முடியுமா? என்பது உள்பட 14 கேள்விகள் இடம் பெற்று இருந்தன.
வரும் 22 ஆம் தேதி விசாரணை
உச்ச நீதிமன்றத்துக்கு கேள்வி எழுப்பி ஜனாதிபதி கடிதம் எழுதிய நிலையில், இது தொடர்பாக பதில் அளிக்க 5 நீதிபதிகள் கொண்டஅரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. தலைமை நீதிபதி பி.ஆர் கவாய், நீதிபதிகள் விக்ரம்நாத், நரசிம்ஹா, அதுல் சந்தூர்கர் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இதையடுத்து, நேற்று இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் வழக்காக பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என பட்டியலிடப்பட்டுள்ளது. இதன்படி இந்த வழக்கு வரும் 22 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மிகவும் முக்கியத்துவம் பெற்ற வழக்கில் விசாரணை வரும் 22 ஆம் தேதி 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
அன்றைய தினம், இந்த வழக்கு தொடர்பாக எந்தெந்த மாநிலங்களிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. பல்வேறு மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அவர்களின் கருத்து கோரப்பட வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications