குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்... சிகிச்சைக்குப் பின்... ராஷ்டிரபதி பவனுக்கு திரும்பினார்
டெல்லி: நெஞ்சு வலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராம்நாத் கோவிந்த் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடந்த சில வாரங்களுக்கு முன் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவர், கடந்த மார்ச் 27ஆம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 75 வயதாகும் ராம்நாத் கோவிந்தின் உடல்நிலையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள். அவரை பைபாஸ் சிகிச்சை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.
அதன்படி கடந்த மார்ச் 30ஆம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள் இதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டனர். அதன் பின்னர், அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பூரணமாகக் குணமடைந்ததைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று குடியரசுத் தலைவர் மாளிகைக்குத் திரும்பினார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான் ராஷ்டிரபதி பவனுக்கு திரும்பியுள்ளேன்.
நான் சீக்கிரம் நலம் பெற வேண்டும் எனப் பிரார்த்தனைகள் செய்த அனைவருக்கும் நன்றிகள். எய்ம்ஸ் மற்றும் ராணுவ மருத்துவமனையில் எனக்குச் சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் மற்றும் நர்சிங் ஊழியர்களுக்கும் நன்றி. கடைசியில் வீட்டிற்குத் திரும்பியதில் மகிழ்ச்சி என அவர் பதிவிட்டுள்ளார்.