விவசாய சட்டங்களுக்கு நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் பாராட்டு.. செங்கோட்டை சம்பவத்திற்கு கண்டனம்
டெல்லி: குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் துரதிஷ்டவசமானது என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கண்டனம் தெரிவித்தார்.
Recommended Video

குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியின்போது செங்கோட்டையில் சிலர் விவசாய கொடியை ஏற்றியதாக கூறப்படுகிறது.
மேலும் அன்று போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். விவசாயி ஒருவர் டிராக்டரில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

சட்டம்-ஒழுங்கு
இந்த நிலையில்தான் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இன்று உரை நிகழ்த்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செங்கோட்டையில் நடைபெற்ற சம்பவங்கள் துரதிஷ்டவசமானது, சட்டம்-ஒழுங்கை யாரும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கண்டனம் தெரிவித்தார்.

10 கோடி குடும்பங்களுக்கு பலன்
மேலும் அவர் பேசுகையில் கூறியதாவது: எனது அரசு விவசாய ரயில் சேவை திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதன் மூலமாக பெரிய சந்தைகளுக்கு விவசாயிகள் எளிதாக தங்கள் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். விவசாய சட்டங்களால் 10 கோடிக்கும் அதிகமான சிறிய விவசாயக் குடும்பங்கள் நலன் பெற்றுள்ளன. சில மாநிலங்கள் மத்திய அரசின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன.

செங்கோட்டை
விவசாயிகள் சமீபத்தில் டிராக்டர் பேரணி நடத்தினர். ஆனால் செங்கோட்டையில் தேசியக்கொடி அவ மரியாதை செய்யப்பட்டது மிகவும் துரதிஷ்டவசமானது. குடியரசு தினத்தன்று நமது அரசியல் சாசனம் கொண்டாடப்படுகிறது. நாம் பெற்றுள்ள சுதந்திரத்தின் முக்கியத்துவம் நினைவுகூரப்படுகிறது. அதேநேரம் நமது குடிமக்களுக்கு உள்ள பொறுப்புகள் மற்றும் கடமைகளையும் அன்றைய நாள் நினைவுபடுத்துகிறது.

சிறு தொழில்கள்
சட்டம்-ஒழுங்கை மதித்து நடப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமையாகும். சிறிய தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது எனது அரசின் முக்கியமான நோக்கமாகும். எனவே சிறு மற்றும் குறு தொழில் துறைக்கு உரிய முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
3 விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக, காங்கிரஸ் உட்பட 18 எதிர்க்கட்சிகள் குடியரசு தலைவர் உரையை புறக்கணித்த நிலையில், ராம்நாத் கோவிந்த் அந்த சட்டங்களை புகழ்ந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications