டெல்லி.. 11 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது.. குடியரசுத் தலைவர் அதிரடி!
டெல்லி: டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு பதவியேற்றது. மொத்தம் இருக்கும் 70 இடங்களில் 66 இடங்களில் அந்த கட்சி வெற்றி பெற்றது. இதில் அல்கா லம்பா உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் பலர் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு மாறிவிட்டனர். இந்த 66 பேரில் 5 பேர் ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டனர்.

இந்த நிலையில் கடந்த 2017 மார்ச் மாதம் விவேக் கார்க் என்ற இளைஞர் குடியரசுத் தலைவரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதன்படி ஆம் ஆத்மி கட்சியின் நிதின் தியாகி, பிரவின் குமார், பவன் குமார் சர்மா உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.
டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாசஸ் கோஹ்லாட் உட்பட 11 எம்எல்ஏக்கள் இரட்டை பதவிகளை வகித்து வருகிறார்கள். பல்வேறு அரசு துறைகளில் பதவி வகித்து வருகிறார்கள். இது விதிகளுக்கு எதிரானது என்று புகார் வைத்தார்.
இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில், இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.
இவர்கள் தங்கள் இரட்டை பதவி மூலம் கூடுதல் சம்பளம் எதுவும் வாங்கவில்லை. கூடுதல் அதிகாரம் அளிக்கப்படவில்லை. அதேபோல் கார், வீடு, அலுவலகம் எதுவும் அளிக்கப்படவில்லை. அதனால் இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியது.
இந்த பதிலை ஏற்றுக்கொண்டு டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.












Click it and Unblock the Notifications