முஸ்லீம் கலாம், தலித் ராம்நாத் கோவிந்த், பழங்குடி திரெளபதி முர்மு-பாஜகவின் 'சமூக நீதி' பின்னணி என்ன?
டெல்லி: சமூக நீதி கோட்பாடு, இடஒதுக்கீடு கொள்கை என்றாலே அலர்ஜியுடன் அணுகிவந்த இந்துத்துவா கட்சியான பாஜக இப்போது அதே சமூக நீதி எனும் முகமூடி அணிந்து கொண்டு ஜனாதிபதி தேர்தலில் பழங்குடி இனப் பெண் திரெளபதி முர்முவை வேட்பாளராக களமிறக்கி இருக்கிறது.
Recommended Video
1980களின் பிற்பகுதி வரை அகில இந்திய அரசியல் களத்தில் சமூக நீதி, இடஒதுக்கீடு என்பது பேசுவதற்கு மறுக்கப்பட்ட பொருளாக இருந்தது. இந்த சித்தாந்தங்கள் என்பவை தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் மட்டுமே உரித்தானவை; அகில இந்திய அரசியலுக்கு அன்னியமானவை என்கிற பார்வை இருந்தது.
நாடு விடுதலைக்கு முன்னரே தோன்றிய திராவிடர் இயக்கத்தின் அடிநாதம்தான் சமூக நீதியும் இடஒதுக்கீடும். இந்த தேசத்தின் அரசியல்சாசனத்தின் முதல் திருத்தமே இடஒதுக்கீட்டுக்கானதுதான். தேர்தல் அரசியலில் பங்கு பெறாத தந்தை பெரியாரின் திராவிடர் இயக்கம்தான், நாட்டின் அரசியல் சாசனத்தில் முதல் திருத்தத்தை இடஒதுக்கீட்டுக்காக கொண்டுவர வைத்து சாதித்தது- இதற்கு காரணம் கொள்கை வலிமை கொண்ட போராட்டமும் பட்டாளமும்தான்.

மாறிய அரசியல் களம்
1980களின் இறுதியில் விபிசிங், மண்டல் கமிஷன், மத்திய அரசு பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு என்பதுதான் நாட்டின் டாப் அஜெண்டாவாக இருந்தது. அப்போதுதான் கருணாநிதி, ராமாராவ், சரத் யாதவ், முலாயம்சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான், கன்சிராம் என எண்ணற்ற ஒடுக்கப்பட்ட சமூகங்களின், இனங்களின் தலைவர்கள் தேசிய அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாக உருவெடுத்திருந்தனர். மண்டல் கமிஷனுக்கு எதிராக ராமர் கோவில் கட்டுவோம் என்கிற கமண்டல அரசியலை கையில் எடுத்தது பாஜக என்று அப்போது திராவிடர் இயக்கத்தினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனால் இடஒதுக்கீட்டுக்கு எதிராக வட இந்தியாவை பற்றி எரிய வைத்தது போராட்டங்கள். இடஒதுக்கீட்டுக்கு எதிராக தீக்குளிப்புகளை அரங்கேற்றின வலதுசாரி சக்திகள்.

ஜனாதிபதியாக கலாம்
ஆனால் இந்திய அரசியலில் சமூக நீதி, இடஒதுக்கீடு என்கிற கோட்பாடு ஆழ வேர்பிடித்து நின்றுவிட்டது. சமூக நீதியை, இடஒதுக்கீட்டைப் புறந்தள்ளிவிட்டு ஒரு கட்சியால் அரசியலில் நிலைத்துவிட முடியாது என்பதை மண்டல் கமிஷனுக்கு எதிராக மரண தியாகங்களுக்கும் தூண்டிவிட்ட வலதுசாரிகளும் புரிந்து கொண்டனர். தங்களது அரசியலுக்கு நேர் எதிரான சமூக நீதியும் இடஒதுக்கீடு முழக்கங்களும்தான் தங்களை இந்திய அரசியலில் நிலைநிறுத்தும் ஆயுதங்கள் என்பதை பாஜக தெள்ளத் தெளிவாகவே புரிந்து கொண்டது.இதன்விளைவாகத்தான் 2002-ம் ஆண்டு இஸ்லாமியரான அப்துல்கலாமை ஜனாதிபதியாக்கியது பாஜக என்ற விமர்சனங்களும் எழுந்தன. அப்துல் கலாம் எனும் இஸ்லாமியரை ஜனாதிபதியாக்கியதன் மூலம் சாமானியர்களிடம் தங்களது இன்னொரு முகத்தை மறைத்துக் கொண்டது பாஜக என திராவிடர் இயக்கங்கள் இன்றளவும் குற்றம் சொல்லி வருகிறார்கள். அன்று அதை பிரதமராக இருந்த வாஜ்பாய் பிரமாதமாக சாதித்தார்.

ராம்நாத் கோவிந்த்
வாஜ்பாய் போட்டுக் கொடுத்த பாதையில் அவரது சீடர்கள் அடுத்தடுத்து பயணிக்கின்றனர். இந்த பயணத்தின் ஒருபகுதியாகத்தான் 2017-ல் ஜனாதிபதியாக தலித் வகுப்பைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியாக்கப்பட்டார். அதாவது பாஜகவும் அதன் இந்துத்துவா பரிவாரங்களும் யாரை எல்லாம் கோட்பாட்டு ரீதியாக ஒதுக்கி வைத்ததோ அந்த வகுப்பினரை எல்லாம் அரசியல் அறுவடைகளுக்காக உயர் பதவிகளில் அமர்த்துவதாக காட்டிக் கொண்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இப்போது அதே பாணியில் பழங்குடி இன பெண்ணான திரெளபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளர் என அறிவித்திருக்கிறது.

சமூக நீதி காரணம்
திரெளபதி முர்மு தேர்வின் மூலம் கிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம், ஒடிஷா, ஜார்க்கண்ட் மாநில அரசியலில் அறுவடை செய்யலாம் என்பது பாஜகவின் கணக்கு. இந்த மாநிலங்களில் காங்கிரஸ் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறது. இந்த மாநிலங்களில் ஆளும் வல்லமையுடன் மாநில கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இருக்கின்றன. இப்படியான சூழலில் ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் பாணியில் திரெள்பதி முர்மு எனும் பழங்குடி இனத்தவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக. பாஜகவின் சித்தாந்தத்தை, கோட்பாட்டை புரிந்து கொண்டவர்களுக்கு இந்த தேர்வு ஆச்சரியமானது அல்ல- இந்திய அரசியல் என்பது தமிழ்நாட்டின் திராவிடர் பேரியக்கம் இந்திய மண்ணில் விதைத்த சமூக நீதி, இடஒதுக்கீடு என்ற கோட்பாடுகளின் அடிப்படையில்தான் இயங்க முடியும்- அதற்கு வலதுசாரிகளும் விதி விலக்காகிவிட முடியாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது திரெளபதி முர்மு எனும் பழங்குடி இனப் பெண் பாஜகவால் ஜானாதிபதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்டிருப்பது!












Click it and Unblock the Notifications