ராஜஸ்தான், ம.பிக்கு ரூ.17,600 கோடியில் வளர்ச்சி திட்டங்கள்! தொடங்கி வைக்க பிரதமர் இன்று வருகை
டெல்லி: ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க இன்று இவ்விரு மாநிலங்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி பயணிக்கிறார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இந்த மாநிலங்களுக்கான பயணத்தை கடந்த 30ம் தேதி முதல் பிரதமர் மோடி துவங்கியுள்ளார். அக்டோபர் மாதம் 6ம் தேதி வரை இந்த மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைக்கவும், தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளவும் பயணத்தை அவர் தொடங்கியுள்ளார்.

முன்னதாக கடந்த 2ம் தேதி மத்தியப் பிரதேசத்திற்கும் ராஜஸ்தான் மாநிலத்திற்கும் பயணித்த அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.7,000 கோடி, மத்தியப் பிரதேசத்தில் ரூ.19,260 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருந்தார். ராஜஸ்தானின் சித்தூர்கருக்கு சென்ற மோடி, அங்கு மெஹசானா-பதிண்டா-குர்தாஸ்பூர் எரிவாயு குழாய் இணைப்பை தொடங்கி வைத்தார். அதேபோல அபு சாலையில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் அமைந்துள்ள சமையல் எரிவாயு நிரப்பு நிலையத்தை தொடங்கி வைத்தார். கோட்டாவில் தேசிய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) நிரந்த வளாகம், பல்வேறு ரயில்வே திட்டங்கள் உள்ளிட்டவற்றையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
அதேபோல மத்திய பிரதேசத்தில், ரூ.11,895 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட தில்லி-வதோதரா விரைவுச்சாலையை மத்திய பிரதேசத்தின் குவாலியரில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும், ரூ.1,880 கோடி மதிப்பிலான 5 சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகள், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தற்போது இதன் தொடர்ச்சியாக இன்று மீண்டும் அவர் இவ்விரு மாநிலங்களுக்கு வருகை தருகிறார். இரு மாநிலங்களிலும் ரூ.17,600 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து என ரூ.5,000 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல ஜோத்பூரில் கட்டப்பட்டுள்ள புதிய ஐஐடி வளாகத்தையும் தொடங்கி வைக்கிறார்.
இதே மத்தியப் பிரதேசத்தை பொருத்த அளவில் ஜபல்பூரில் வீட்டு வசதி, குடிநீர் உட்பட ரூ.12,600 கோடி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இரு மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், நவம்பர்- டிசம்பர் மாதங்களில் அந்த மாநிலங்களுக்குப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications