கொரோனா தடுப்பூசி.. பிரதமர் மோடி மும்முரம்.. அனைத்து மாநில முதல்வர்களுடனும் 11ம் தேதி ஆலோசனை
டெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பூசி செயல்பாடு பற்றி ஜனவரி 11ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஜனவரி 13-ஆம் தேதி முதல் அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. அதற்கு முன்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதுவரை கொரோனா தடுப்பு ஊசி ஒத்திகை நிகழ்ச்சி இரண்டுமுறை நடைபெற்றுள்ளது. இன்று, நாடு முழுக்க, 736 மாவட்டங்களில் மாபெரும் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழகம் வருகை தந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தடுப்பூசி நடைமுறைகள் பற்றி நேரில் பார்வையிட்டார்.
இந்த நிலையில் வரும் 11ம் தேதி மாலை 4 மணிக்கு அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்துகிறார். அப்போது, தடுப்பூசி மற்றும் அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது பற்றி விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.
இதுவரை ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications