இன்று தான் கடைசி நாள்.. டிரம்ப் வரிக்கு இந்தியா பதிலடி என்ன! மோடி நடத்தும் முக்கிய மீட்டிங்
டெல்லி: ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் காலக்கெடு இன்றுடன் முடியும் நிலையில், நாளை கூடுதல் வரி அமலுக்கு வருகிறது. இந்தச் சூழலில் பிரதமர் மோடி தலைமையில் இன்று முக்கியமான கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டிரம்ப்பிற்குப் பிரதமர் மோடி மறைமுகமாகப் பதிலடியையும் கொடுத்திருக்கிறார்.
ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதாகச் சொல்லி இந்தியா மீது டிரம்ப் 50% வரியை விதித்துள்ளார். அதில் 25% இம்மாதத் தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 25% நாளை அமலுக்கு வருகிறது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். விவசாயிகள் மற்றும் சிறு தொழில்களின் நலன்கள் மீது தனது அரசு எந்தச் சமரசமும் செய்யாது என்று கூறினார். மேலும், "எங்கள் மீதான அழுத்தம் அதிகரிக்கலாம், ஆனால் நாங்கள் அதைத் தாங்கிக்கொள்வோம்" என்றும் அவர் தெரிவித்தார்.

நாளை தான் கடைசி நாள்
உலகிலேயே அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவுக்கு ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் டிரம்ப் இன்று ஆகஸ்ட் 26 வரை காலக்கெடு விதித்திருந்தார். அதாவது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் கூறியிருந்தார். அந்தக் காலக்கெடு இன்று ஆகஸ்ட் 26ம் தேதியுடன் முடிவடைகிறது. நாளை முதல் கூடுதல் வரி அமலுக்கு வருகிறது.
முக்கிய மீட்டிங்
இந்தச் சூழலில் தான் மோடி தலைமையில் இன்று முக்கியமான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. டிரம்ப் வரி நாளை நடைமுறைக்கு வரும் சூழலில் நடக்கும் இந்தக் கூட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக நேற்று குஜராத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, மறைமுகமாக டிரம்ப்பிற்கும் பதிலடி கொடுத்திருந்தார்.
மோடி பதிலடி
அதாவது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்த பிறகு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "உலகில் இன்று அனைவரும் பொருளாதார நலன்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்வதில் மும்முரமாக உள்ளனர். இந்த அகமதாபாத் மண்ணில் இருந்து.. இந்த காந்தியின் மண்ணில் இருந்து சிறு தொழில்முனைவோர்கள், கடை வைத்திருக்கும் சகோதர சகோதரிகள், விவசாயச் சகோதரச் சகோதரிகள், கால்நடை விவசாயிகளுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நான் இருக்கும் வரை இந்த நாட்டின் தொழில்முனைவோர்கள், விவசாயிகள் அல்லது கால்நடை விவசாயிகளுக்கு எப்போதும் முன்னுரிமை தருவேன். உங்கள் நலன்களே மோடிக்கு எப்போதும் முதன்மையானவை என்று நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
சமரசம் இல்லை
எவ்வளவு அழுத்தம் வந்தாலும் எனது அரசு தொழில்முனைவோர்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை விவசாயிகளுக்கு எந்தத் தீங்கும் வர விடாது. இதற்காக எவ்வளவு அழுத்தம் வந்தாலும், அதை இந்த அரசு தாங்கும். அந்த அழுத்தங்கள் நமது பலத்தை அதிகரிக்கவே செய்யும்" என்றார். மேலும், சுதேசிப் பொருட்களை இந்தியர்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "நாம் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். வணிகர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு வெளியே 'சுதேசி' பொருட்களை மட்டுமே விற்கிறோம் என்று ஒரு பெரிய பலகையை வைக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கு எப்படிப் பாதிப்பு
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக ரத்தினங்கள், ஆபரணங்கள், ஜவுளி மற்றும் கடல் உணவுப் பொருட்கள் எனப் பல்வேறு தொழில்களும் அதிக வரியை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளன. இந்தியாவுக்கு அமெரிக்கா முக்கியமான சந்தையாக இருப்பதால்.. அதை நிராகரிக்கவும் முடியாது. மேலும், இந்த வரிகள் இருப்பதால் மற்ற நாடுகளுடன் போட்டி போடவும் முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் இன்று முக்கியமான மீட்டிங்கை மோடி நடத்துகிறார்.












Click it and Unblock the Notifications