அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம்.. ராகுல், பிரியங்கா, கனிமொழி அணிந்த ஆடையை கவனிச்சீங்களா?ஏன் நில நிறம்
டெல்லி: அம்பேத்கர் பற்றி இழிவாக பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக தமிழகம், டெல்லி உள்பட பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் அமித்ஷாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திமுகவின் கனிமொழி ஆகியோர் நீல நிற ஆடை அணிந்து வந்து இருந்தனர்.
சட்ட மேதை அம்பேத்கர் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாடு முழுவதும் அமித்ஷாவுக்கு எதிராக பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. தமிழகத்திலும் இன்று மாநிலம் முழுவதும் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இன்று நாடாளுமன்றம் காலையில் கூடுவதற்கு முன்பே இந்தியா கூட்டணியினர் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று பாஜக எம்பிக்களும் ஒன்று திரண்டு, அம்பேத்கரை காங்கிரஸ் இழிவுபடுத்துகிறது, அவமானப்படுத்துகிறது என குற்றம்சாட்டி போராட்டம் செய்தனர். தொடர்ந்து நாடாளுமன்றம் உள்ளே செல்ல முயன்றபோது பாஜக காங்கிரஸ் எம்பிக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜக எம்பி ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்றம் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கரை அவமதித்ததாக கூறி திமுக எம்பிக்கள், இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
"வீரவணக்கம்.. வீரவணக்கம்.. அம்பேத்கருக்கு வீர வணக்கம்.." என்றும்.. "மன்னிப்பு கேள்.. மன்னிப்பு கேள்.. அமித்ஷா மன்னிப்பு கேள்.." என்றும் நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்பிக்கள் முழக்கமிட்டனர். அப்போது கனிமொழி எம்பி, டி ஆர் பாலு எம்பி உள்ளிட்டோர் கையில் அம்பேத்கரின் புகைப்படங்களை வைத்திருந்தனர். இதேபோன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலரும் 'ஐ ஆம் அம்பேத்கர்' என்று எழுதப்பட்டிருந்த பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.
இதேபோன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலரும் நீல நிற ஆடைகள் மற்றும் துண்டுகளை தோளில் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். கனிமொழி எம்பி நீல நிற சேலை அணிந்து வந்திருந்தார். பிரியங்கா காந்தியும் நீல நிற சேலை மற்றும் கருப்பு நிற கோர்ட் அணிந்து வந்திருந்தார். ராகுல் காந்தியும் நீல நிற டீ ஷர்ட் அணிந்து வந்திருந்தார். இந்தியா கூட்டணி எம்பிக்கள் உள்பட பலரும் நீல நிற ஆடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டது கவனத்தை பெற்றது.
ஏன் நில நிறம்?:
சட்டமேதை அம்பேத்கருக்கு பிடித்தமான நிறம் நீலம். ஆனால் அதுமட்டும் காரணம் கிடையாது. அம்பேத்கர் எப்போதும் பரந்து விரிந்த வானம் போலவே நம் எண்ணம், சிந்தனைகள் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். வானம் நீலம் நிறம் என்பதால் அவருக்கு அந்த நிறத்தின் மீது பிரியம் உண்டானது. இதன் பிறகே நீலம் நிறம் என்றால் அது அம்பேத்கரையும் குறிக்கும் விதமாக ஆகிவிட்டது.

இந்த நிலையில் தான் பாலாசாகேப் அம்பேத்கரின் அடையாள நிறம் நீலம் என்பதால், அவரை குறிக்கும் விதமாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, எம்பி பிரியங்கா காந்தி, எம்பி கனிமொழி உள்ளிட்டோர் நீலம் நிறத்திலான ஆடையினை அணிந்து வந்திருந்தனர். மேலும் சிலர் அம்பேத்கரின் கோட்டை குறிக்கும் வகையில் கருப்பு நிற கோட்டினையும் அணிந்து வந்திருந்தனர்.
தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்:
அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கையில் அம்பேத்கர் புகைப்படங்கள், அவரது வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், அமைச்சர் ஆர் எஸ் பாரதி உள்ளிட்டோர் அமித்ஷாவை கண்டித்து போராட்டம் செய்தனர்.
அப்போது பேசிய ஆர் எஸ் பாரதி, அம்பேத்கர் பற்றி பேசிய, அமித்ஷா மதியாதையாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் கேட்காவிட்டாலும், உணர்வுகளை மதிக்கக் கூடியவர்கள் அவரை அமைச்சரவையில் இருந்து குறைந்தது 6 மாத காலமாவது நீக்க வேண்டும் என்று கூறினார். இதேபோல் தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.












Click it and Unblock the Notifications