டெல்லி சட்டசபை தேர்தல்.. வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
டெல்லி: டெல்லியில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வரும் மாணவர்கள் போராட்டம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. அவற்றுள் டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், ஷாகீன்பாக் பகுதி ஆகியவற்றில் நடத்தப்படும் போராட்டம் தீவிரமாக உள்ளது.
இந்த தீவிர போராட்டங்களுக்கு மத்தியில் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. வாக்குச் சாவடி மையமாக ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு பகுதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதியும் அசம்பாவிதச் சம்பவம் நடைபெறாமல் இருக்கவும் வாயில் எண் 7 இல் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் வாயில் எண் 4-ஆம் இடத்திற்கு நேற்று இரவே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருந்த வாயில் எண் 7 பகுதி தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் 15-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து இன்று தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. இந்த தேர்தல் முடிவுகள் வரும் 11-ஆம் தேதி அறிவிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
Delhi: The road outside gate no. 7 of Jamia Millia Islamia has been cleared ahead of voting for #DelhiElections2020 tomorrow. The protest has shifted to gate no. 4. pic.twitter.com/uO0r78F3Dz
— ANI (@ANI) February 7, 2020
தலைநகர் டெல்லியை கைப்பற்றுவதில் காலம்காலமாக கட்சியினரிடையே போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள ஆம் ஆத்மி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. அது போல் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தன. டெல்லியில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தலில் சிஏஏ போராட்டம் எதிரொலிக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.