காதலனுக்காக இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண்! கணவரை விட்டு 4 பிள்ளைகளுடன் வருகை! காதல் பூத்தது எப்படி?
டெல்லி: நொய்டாவை சேர்ந்த இளைஞருடன் வாழ எல்லை தாண்டி 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தானை சேர்ந்த பெண் இந்து மதத்துக்கு மாறியுள்ளார். இதையடுத்து குழந்தைகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி பகுதியை சேர்ந்தவர் சீமா ஹைதர் (வயது 27). இவருக்கு குலாம் ஹைதர் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். குலாம் ஹைதர் சவூதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். சீமா ஹைதர் தனது குழந்தைகளுடன் பாகிஸ்தானில் வசித்து வந்தார்.

கொரோனா பரவிய காலத்தில் சீமா பப்ஜி விளையாட்டை விளையாட தொடங்கினார். அப்போது பப்ஜி விளையாட்டின் மூலம் டெல்லி எல்லையில் அமைந்துள்ள உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் சச்சின் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களின் காதலை வளர்த்து வந்தனர். மேலும் நேபாளத்தில் வைத்து இருவரும் சந்தித்தனர்.
இதற்கிடையே சீமா தனது கணவர் குலாம் ஹைதரை விட்டுவிட்டு சச்சினுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார். இதையடுத்து அவர் பாகிஸ்தானில் உள்ள நிலத்தை விற்பனை செய்து அந்த பணத்தை வைத்து கொண்டு நேபாளம் வழியாக எல்லை தாண்டி 4 குழந்தைகளுடன் இந்தியா வந்தார். அதன்பிறகு சீமா தனது 4 குழந்தைகளுடன் சச்சினுடன் நொய்டாவில் வசிக்க தொடங்கினார்.
இதற்கிடையே தான் சம்பவம் குறித்து அறிந்த மக்கள் போலீசில் புகார் கூறினர். இதையடுத்து சச்சின்-சீமா ஜோடி தலைமறைவான நிலையில் அரியானவால் கைது செய்யப்பட்டனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர் ஜாமீனில் விடுதலையாகி உள்ளனர்.
இந்நிலையில் தான் சீமா மீண்டும் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. சச்சினுடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார். அதன்படி அவர் முஸ்லிம் மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறியுள்ளார். சீமா ஹைதர் என்ற தனது பெயரை தற்போது அவர் சீமா என மாற்றி கொண்டார். சீமா என்ற பெயர் இந்து மதத்திலும் நிறையபேர் பயன்படுத்துகின்றனர். இதனால் அவர் ஹைதர் என்ற தனது கணவரின் பெயரை மட்டும் நீக்கி இந்து மதத்தில் இணைந்துள்ளார்.
இதுதவிர அவரது 4 குழந்தைகளின் பெயர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் பிரியங்கா, மன்னி, பாரி, ராஜ் என மாற்றப்பட்டுள்ளது. தற்போது சீமா தனது 4 குழந்தைகளுடன் சச்சினுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இவர்களின் காதலை சச்சினின் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். விரைவில் திருமணம் செய்ய உள்ளனர்.
இதற்கிடையே தான் சீமா மற்றும் அவரது 4 குழந்தைகளுக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என சச்சின் சார்பில் பிரதமர் மோடி மற்றும் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுபற்றி சீமா கூறுகையில், ‛‛சச்சின் இந்துவாக இருக்கிறார். இதனால் நானும் இந்து தான். இப்போது இந்திய பெண்ணாக உணர்கிறேன். என் மீது எனது குடும்பத்தினரும், எனது கணவரின் குடும்பத்தினரும் கோபமாக இருக்கலாம். நான் இப்போது பாகிஸ்தான் சென்றால் என்னை அவர்கள் கொன்று விடுவார்கள்'' என்றார்.
முன்னதாக சீமாவின் கணவர் குலாம் ஹைதர் வீடியோ ஒன்றின் மூலம் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்திருந்தார். அதில் ‛‛எனது மனைவி, குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வந்துள்ளார். பப்ஜி விளையாட்டில் பழகி அவரை இந்தியாவுக்கு அந்த நபர் வரவழைத்துள்ளார். எனது மனைவி, குழந்தைகளை மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பிவிட வேண்டும்.
இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தான் உதவி செய்ய வேண்டும். அப்போது தான் பாகிஸ்தானில் நாங்கள் குடும்பமாக வாழ வேண்டும்'' என உருக்கமாக தெரிவித்து இருந்தார். இத்தகயை சூழலில் தான் சீமா தனது குழந்தைகளுடன் இந்து மதத்துக்கு மாறி சச்சினுடன் வசிக்க தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications