பாக்., இனி வாலாட்டக் கூடாது... பாடம் கற்பிக்க வேண்டும்... ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆவேச முழக்கம்
டெல்லி: தீவிரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி பாடம் கற்பிக்க வேண்டும் என்று போராட்டக் குரல் எழுந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டன முழக்கங்களும், போராட்டங்களும் நடந்து வருகின்றன. சிறுவர், சிறுமிகள் மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாடம் கற்பிக்க வேண்டும்
ஜம்மு - காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வீரர்களின் உயிரிழப்புக்கு வருத்தத்தை தெரிவிக்க ஆர்ப்பாட்டங்களும், இரங்கல் கூட்டமும் நடைபெற்றன. தீவிரவாதத்தை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் முழக்கங்கள் எழுப்பியதோடு, பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்து சேனா போராட்டம்
அந்த வகையில், பாக்., பிரதமர் இம்ரான் கான் மற்றும் பாகிஸ்தானை தலைமை இடமாக வைத்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மௌலானா மசூத் அசார் ஆகியோரின் புகைப்படத்தினை டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இந்து சேனா அமைப்பினர் தீ வைத்து எரித்தனர்.
விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி)
டெல்லியில், தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஜ்ரங்தால் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்
இதே போல், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
தெலங்கானாவில் அமைதி பேரணி
தெலங்கானாவில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் மலர் தூவியும், மெழுவர்த்தி ஏந்தியும் உயிர்நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.
ஜம்மு-வில் அமைதி பேரனி
ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் பௌத்த சங்கம் ஏற்பாடு செய்திருந்த அமைதி பேரணியில் இன்று மாலை ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர்.