ராகுல் காந்தி, பிரியங்காவுக்கு அனுபவம் போதாது...அதிர்ச்சி கிளப்பும் அமரீந்தர் சிங்.. கடும் விமர்சனம்
டெல்லி: நேருவின் வாரிசுகளுக்கு போதிய அனுபவம் இல்லை என்று கூறிய பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தேர்தலில் சித்துவுக்கு எதிராக வலுவான வேட்பாளரைக் களமிறக்கி அவரை தோற்கடிப்பேன் என்றும் தெரிவித்தார்,
பஞ்சாபில் அமரீந்தர் சிங் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கு இடையே பல மாதங்களாக நீடித்த மோதல் இப்போது தான் ஒரு மாதிரியாக முடிந்துள்ளது. பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார்.
பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில் தலித் ஒருவரை முதல்வராக நியமித்துள்ளது காங்கிரஸ் வாக்கு வங்கியை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அமரீந்தர் சிங் பேச்சு
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், "நவ்ஜோத் சிங் சித்து முதல்வராவதைத் தடுக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். 2022 சட்டசபைத் தேர்தலில் சித்துவுக்கு எதிராக ஒரு வலுவான வேட்பாளரை நிறுத்தி அவரை தோற்கடிப்பேன். இது போன்ற ஆபத்தான நபரிடம் எனது மாநிலம் செல்வதைத் தடுக்க எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ளேன். சித்து தன்னிச்சையாக நடந்து கொண்டால் கட்சிக்கு அது சரிப்பட்டு வராது. அந்த டிராமா மாஸ்டர் (சித்து) தலைமையில் பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தைத் தொட்டாலே அது பெரிய விஷயம்.

சோனியா காந்தி
நான் வெற்றிக்குப் பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகவே இருந்தேன். ஆனால் தோல்வியுடன் ஒருபோதும் ஓய்வு பெற மாட்டேன். எனது ராஜினாமாவை நான் மூன்று வாரங்களுக்கு முன்பே சோனியா காந்தியிடம் வழங்கினேன். ஆனால் அவர் தான் என்னை முதல்வர் பதவியில் தொடரும்படி கேட்டுக்கொண்டார். நான் முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறேன். எனக்குப் பதிலாக வேறொருவரை முதல்வராக நியமிக்கும்படி சோனியா காந்தியை நான் கேட்டுக்கொண்டேன். ஆனால் அது நடக்கவில்லை. அந்த சமயத்தில் என் மீது நம்பிக்கை இல்லாமல் அவர்கள் நடந்துகொண்ட விதம் என்னை அவமானப்படுத்தும் வகையிலேயே இருந்தது.

நேருவின் வாரிசுகள்
நான் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கோவா-க்கோ அல்லது வேறு இடத்திற்கோ அழைத்துச் சென்றிருக்க மாட்டேன். நான் அப்படிச் செய்பவன் இல்லை. அது எனது பாணியும் இல்லை. இது நேருவின் வாரிசுகளுக்கு நன்றாகவே தெரியும். பிரியங்காவும் ராகுலும் என் பிள்ளைகளைப் போன்றவர்கள். இது இப்படி முடிந்திருக்கக் கூடாது. நான் மிகவும் காயப்பட்டுள்ளேன். நேருவின் வாரிசுகளுக்கு அனுபவம் போதவில்லை. அவர்களது ஆலோசகர்கள் அவர்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள்" என்றார்.

பொய் குற்றச்சாட்டு
எதிர்கால திட்டம் குறித்து தீவிரமாகப் பரிசீலனை செய்து வருவதாகத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,"அங்கு வயது எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. பொதுமக்களால் என்னை அணுக முடியவில்லை என்ற பொய்யான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். நான் ஏழு முறை சட்டசபைக்கும் இரண்டு முறை நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இதுவே இந்தப் பொய்க் குற்றச்சாட்டிற்குப் பதில் சொல்லும். காங்கிரஸ் தலைமை முதல்வராக வேறொருவரை நியமிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டது. இதனால் இதுபோன்ற காரணங்களைத் தெரிவித்தனர்.

நடவடிக்கை
மாஃபியா உடன் தொடர்பு இருக்கும் அமைச்சர்களுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார்கள். இப்போது அதே தலைவர்கள் தான் அவர்களுடன் உள்ளனர். அவர்கள் மீது ஏன் இன்னும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. டெல்லியில் இருந்து பஞ்சாபை ஆட்சி செய்வது முற்றிலும் தவறானது. ஒரு முதல்வராக நான் தான் அனைத்து அமைச்சர்களையும் நியமித்தேன். அவர்கள் அனைவரது தகுதியும் திறமையும் எனக்குத் தெரியும், டெல்லியில் இருக்கும் வேணுகோபால், அஜய் மாக்கன். ரந்தீப் சுர்ஜேவாலா போன்ற காங்கிரஸ் தலைவர்களால் யார் எந்த துறைக்குச் சரியான நபர் என்பதை முடிவு செய்ய முடியாது" என்றார்.

சாதி பார்க்க மாட்டேன்
பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 30% தலித்துகள் ஆவர். அடுத்தாண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் வாக்கு வங்கியை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மறைமுகமாகப் பேசிய அவர், "அனைவரும் சமம் என்பதை நம் மதங்கள் நமக்குப் போதிக்கின்றன. நான் மக்களை அவர்களின் சாதியின் அடிப்படையில் பார்க்கவில்லை" என்றார்.

தாக்கு
தொடர்ந்து நவ்ஜோத் சிங் சித்துவை விமர்சித்துப் பேசிய அவர், "நான் முதல்வராக இருந்த சமயத்திலும் பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் எனக்கு நல்ல ஆலோசனைகளைத் தருவார். ஆனால் அவர் ஒருபோதும் அரசை எப்படி நடத்த வேண்டும் என என்னிடம் கூறியதில்லை. நவ்ஜோத் சிங் சித்துவால் அவரது துறையையே ஒழுங்காகப் பார்த்துக்கொள்ள முடியவில்லை. இதில் அவர் அமைச்சரவையில் வேறு தலையிடுகிறார். சரண்ஜித் சிங் ஒரு திறமைசாலி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவருக்கு உள் துறையைக் கையாள்வதில் அனுபவம் இல்லை. பாகிஸ்தானுடன் பஞ்சாப் சுமார் 600 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. எனவே பஞ்சாபிற்கு இது மிகவும் முக்கியமான ஒன்று.

உள் துறை முக்கியம்
பாகிஸ்தானில் இருந்து பஞ்சாபிற்கு அதிகளவில் ஆயுதங்களும் வெடிமருந்துகளும் வருகின்றன. சித்துவுக்கும் பாகிஸ்தான் தலைவருக்கும் நெருங்கிய உறவு இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மின் கட்டணத்தைத் தள்ளுபடி செய்வதாக புதிய முதல்வர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதலில் நிதியமைச்சருடன் முதல்வர் விவாதித்திருக்க வேண்டும். அவர்கள் மாநிலத்தைத் திவாலாக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications