பஞ்சாப் தொழிலாளிக்கு லாட்டரியில் ரூ.1.5 கோடி பரிசு விழுந்தது.. ஆனாலும் குடும்பத்துடன் தலைமறைவு
டெல்லி: ஒரு மனிதனுக்கு லாட்டரியில் அதிர்ஷ்டம் அடிக்கும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த அதிர்ஷ்டம் கோடியில் ஒருவருக்கு தான் கிடைக்கிறது. கோடியில் ஒருவராக கிடைத்த அதிர்ஷ்டம் காரணமாக கோடீஸ்வரன் ஆகும் சில ஏழைகள்.. அதன்பிறகு கவுண்டமனி பட பாணியில் அந்த கார் என்ன விலை, ரோடு என்ன விலை என்று கேட்காத குறையாக வாழ்வார்கள். ஆனால் பஞ்சாபில் 1.5 கோடி லாட்டரியில் பரிசு விழுந்த போதிலும், கொள்ளையடித்து விடுவார்கள் என்ற பயத்தால், அவர் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்.
லாட்டரியில் சிலருக்கு கோடிகளில் பரிசு விழுவதை பார்த்திருப்பீர்கள்.. குறிப்பாக தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் வாரம் வாரம் குழுக்கல் நடந்தபடி இருக்கும். மாதம் ஒரு முறையும், மூன்று மாதம் ஒரு முறையும் பம்பர் குழுக்கல்கள் நடக்கும். ஜெயித்தால் கோடிகளில் பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த கோடிகளில் வழங்கப்படும் பரிசை ஏழைகள், கூலி தொழிலாளிகள் வாங்கிய சம்பவங்கள் நடந்துள்ளது. கேரளாவை பொறுத்தவரை ஜெயித்தவர் விவரங்கள் முழுமையாக வெளிவருவது இல்லை.. ஜெயித்தவர்கள் தங்களிடம் பணத்தை யாராவது பறிப்பார்களோ என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் மறைமுகமாக சென்றே பணத்தை வாங்குகிறார்கள். ஒரு சிலரே வெளி உலகிற்கு தான் பரிசு வென்றதை அறிவிக்கிறார்கள்.

பஞ்சாபிலும் வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது. அதிர்ஷ்டம் ஒருபுறம் வீடு தேடி வந்திருக்கிறது. ஆனால் அந்த பணத்தை யாராவது திருடிவிடுவார்களோ என்ற பயத்தில் அந்த தம்பதி இருக்கிறார்கள்.
பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ராம் சிங் மற்றும் அவரது மனைவி நசீப் கௌர் ஆகியோருக்கு லாட்டரியில் ஜாக்பாட் பரிசு அடித்திருக்கிறது. இவர்கள் இருவரும் அன்றாட விவசாய வேலைகளைச் செய்பவர்கள். வெறும் ₹200 கொடுத்து வாங்கிய லாட்டரி டிக்கெட்டில், அவர்களுக்குப் பஞ்சாப் மாநில லாட்டரியில் முதல் பரிசான ₹1.5 கோடி விழுந்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
லாட்டரி விழுந்ததை அறிந்ததும் அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி கொஞ்ச நேரம்தான் நீடித்திருக்கிறது. காரணம், இந்த விஷயம் அக்கம்பக்கத்தில் காட்டுத்தீ போலப் பரவிவிட்டது. இவ்வளவு பெரிய பணம் கிடைத்த செய்தி ஊருக்கே தெரிந்ததால், கொள்ளையர்கள் அல்லது கிரிமினல்களால் தங்களுக்கு ஆபத்து வரலாம், யாராவது கடத்திக் கொண்டுபோய் பணம் கேட்டு மிரட்டலாம் என்று அந்த ஏழைக் குடும்பம் பயந்து போனது. திடீர் பணக்காரர்கள் ஆனதால் ஏற்பட்ட இந்த அச்சம்தான் அவர்கள் தலைமறைவாகிவிட்டார்களாம்.
பயந்துபோன நசீப் கௌர் மற்றும் ராம் சிங் குடும்பத்தினர், தங்கள் வீட்டைப் பூட்டிவிட்டு, செல்போன்களை ஆஃப் செய்துவிட்டு, யாருக்கும் தெரியாத ஒரு ரகசிய இடத்திற்குப் போய்விட்டார்களாம். இந்த விஷயம் ஃபரித்கோட் காவல் துறை வரை சென்றது. உடனே அவர்கள் சுதாரித்துக் கொண்டனர். ஃபரித்கோட் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தர்லோச்சன் சிங் , அந்தக் குடும்பத்தைத் தொடர்புகொண்டு, "நீங்கள் பயப்பட வேண்டாம், நாங்கள் உங்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிப்போம். உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது," என்று நம்பிக்கை அளித்துள்ளார். மொத்தத்தில், லாட்டரியில் கிடைத்த பெரும் பணமும், அதனால் ஏற்பட்ட கொள்ளை பயமும் அந்த குடும்பத்தின் நிம்மதியை காலி செய்துள்ளது.












Click it and Unblock the Notifications