சீனாவுக்கு எதிராக..அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஆஸி. பிரதமர் அல்பானீசுடன் பிரதமர் மோடி பேசியது என்ன?
டெல்லி: குவாட் உச்சி மாநாடு, இந்தோ-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு உருவாக்கும் என ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் சீனாவுக்கு எதிரான வியூகம் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் மேலாதிக்கத்தை கட்டுப்படுத்தும் வியூகங்கள் குறித்து அமெரிக்கா அதிபர் ஜோ பிடன், ஆஸி. பிரதமர் அல்பானீசு உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். ஜப்பான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி நாடு திரும்பினார்.
Recommended Video
குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்ற பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதன்ஒரு பகுதியாக, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசை சந்தித்து பேசினார் பிரதமர் மோடி.
அப்போது, தேர்தலில் வெற்றி பெற்றதற்காக அல்பானீசுக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வர்த்தகம், தொழில் முதலீடு, பாதுகாப்பு, உற்பத்தி, அறிவியல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளின் பன்முக ஒத்துழைப்புகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இருநாடுகளிடையேயான உறவில் நேர்மறையான வேகத்தை தொடர இருநாட்டு தலைவர்களும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். அதைத்தொடர்ந்து விரைவில் இந்தியாவுக்கு வருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இதேபோல் அமெரிக்க அதிபர் பிடனுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாஷிங்டனிலும், அதன் பின்னர் ஜி-20, சிஓபி 26 உச்சிமாநாடுகளிலும் இருதலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு நிகழ்ந்தது. மிக அண்மையில் கடந்த மாதம் 11-ந் தேதி இரு தலைவர்களும் வீடியோ கான்பரன்ஸில் கலந்துரையாடினர். இந்தியா- அமெரிக்கா இடையே பயன் சார்ந்த ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கு முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் முன்முயற்சியை இருதரப்பும் தொடங்கியுள்ளன. இந்தியாவில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் இணை தலைமையில், செயற்கை நுண்ணறிவு குவாண்டம் கம்ப்யூட்டிங், 5ஜி/6ஜி, பயோடெக், விண்வெளி மற்றும் செமிகண்டக்டர்கள் போன்றவற்றை, இரு நாடுகளின் அரசு, கல்வித்துறை மற்றும் தொழில்துறை ஆகியவற்றில் பயன்படுத்த ஐசிஇடி நெருக்கமான தொடர்பை உருவாக்கும்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது இந்தியா-அமெரிக்க இருதரப்பு உறவில் முக்கிய தூண் என்று குறிப்பிட்டு, இரு தரப்பினரும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர். இந்தச் சூழலில், மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா அல்லது இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பயனளிக்கும் தன்னிறைவு இந்தியா திட்டங்களின் கீழ் இந்தியாவில் உற்பத்தி செய்ய இந்தியாவுடன் கூட்டு சேருமாறு அமெரிக்க தொழில்துறைக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
அதேபோல் தெற்காசியா மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய பிரச்சனைகள் குறித்து இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர், சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான தங்கள் பகிரப்பட்ட பார்வையை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
ஜப்பானில் பிரதமர் மோடி! சுசூகி உள்ளிட்ட முன்னணி தொழில்நிறுவன தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை!
ஜப்பானின் முன்னாள் பிரதமர் யோஷிஹிடே சுகாவுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் பிரதமர் மோடி. அப்போது, 2021-ம் ஆண்டில் வாஷிங்டனில் நடந்த குவாட் உச்சி மாநாட்டில் தாங்கள் சந்தித்து பேசியதை நினைவு கூர்ந்தனர். இந்தியா, ஜப்பான் இடையேயான உறவை வலுப்படுத்த யோஷிஹிடே சுகா அளித்த பங்களிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
மேலும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ், பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடா அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இணைந்து குவாட் கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர். அதில் கொவிட் -19 பொருந்தொற்று உலகைச்சுற்றி இன்னமும் மனிதர்கள் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும் நிலையிலும், அரசுகளிடையே எதேச்சையான போக்குகள் உள்ளபோதும், உக்ரைனில் சோகமான மோதல் உள்ளபோதும், நாம் உறுதியுடன் இருக்கிறோம். அனைத்து வடிவங்களிலுமான பயங்கரவாதம் மற்றும் வன்முறையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எந்த வகையிலும் பயங்கரவாத செயல்களை நியாயப்படுத்த முடியாது என்பதை வலியுறுத்துகிறோம். உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான எங்களின் போராட்டத்தை நாங்கள் மீண்டும் உறுதி செய்கிறோம். அனைத்து பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக ஒருங்கிணைந்து நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொவிட்-19ன் தாக்கங்கள் உலகில் பேரழிவை ஏற்படுத்தியது. நமது சமூகங்கள், குடிமக்கள், சுகாதாரப் பணியாளர்கள், பொருளாதாரம் ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார பாதுகாப்புக்கு சிறந்த கட்டமைப்பை உருவாக்குதல், சுகாதார நடைமுறைகளை வலுப்படுத்துதல் என்ற பார்வையுடன் கொவிட்-19 எதிர்கொள்ள குவாட் அமைப்பின் நாடுகள் உலகளாவிய முயற்சிகளுக்கு தலைமையேற்பதை தொடரும்.
இந்தியா பசிஃபிக் பிராந்தியத்தில் உற்பத்தி திறனையும் வளத்தையும் அதிகரிப்பதற்கு முக்கியமான அடிப்படை கட்டமைப்புக்கு ஆழ்ந்த ஒத்துழைப்பை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். பல நாடுகளில் பெருந்தொற்றால் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் கடன் பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் நாங்கள் உறுதி ஏற்கிறோம்.
அடுத்த 5 ஆண்டுகளில் இந்த பிராந்தியத்தில் அடிப்படை கட்டமைப்புக்கான உதவி மற்றும் முதலீட்டுக்கு 50 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக குவாட் கோர உள்ளது. "தணிப்பு" மற்றும் "ஏற்பு" என்பதை இரண்டு மையப்பொருள்களாக கொண்டு இன்று நாங்கள் "குவாட் காலநிலை மாற்ற ஏற்பு மற்றும் தணிப்பு திட்டத்தை" தொடங்கியுள்ளோம். 2050க்குள் கரியமிலவாயு வெளியேற்றத்தை முற்றிலுமாக நீக்குவதற்கு சட்டம் இயற்றியது உட்பட காலநிலை மாற்றம் குறித்த புதிய ஆஸ்திரேலிய அரசின் வலுவான செயல் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்.
மக்களுடன் மக்கள் உறவுகளை அங்கீகரிக்கும் விதமாக அதிகாரப்பூர்வ குவாட் ஃபெலோஷிப் அறிவிக்கப்பட்டிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். இதற்கு விண்ணப்பம் செய்வது தற்போது தொடங்கியுள்ளது. குவாட் நாடுகளிலிருந்து 100 மாணவர்கள் அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் பட்டப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என 4 நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது இந்தியா, பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் மேலாத்திக்கத்துக்கு எதிராக குவாட் அமைப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது; குவாட் அமைப்பு அல்லாமல் இந்தோ-பசிபிக் கூட்டமைப்பின் 13 நாடுகளும் சீனாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது என்பவையே இந்த சந்திப்புகளின் வெளிப்பாடாக இருந்தது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.