"அந்த" விஷயம் வந்தால் தான் பெட்ரோல் விலை குறையும்... மோடி அரசை கலாய்த்த ராகுல் காந்தி!
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்
டெல்லி: "பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் மக்களிடம் வரிக் கொள்ளை நடக்கிறது... ஏதாவது மாநிலத்தில் தேர்தல் வந்தால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்தப்படும்" என்று ராகுல்காந்தி பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு அச்சத்தையும், கலக்கத்தையும் உண்டாக்கி வருகிறது.
சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப நம் நாட்டில் பெட்ரோல், டீசலுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.. அதன்படியே, அந்த பெட்ரோல் டீசலுக்கான விலை நிர்ணயமும் செய்யப்படுகிறது.
விண்ணை தொடும் பெட்ரோல், டீசல் விலை.. மீண்டும் அதிகரிப்பு.. இன்றைய விலை நிலவரம்!
இந்தியா
ஏற்கனவே கொரோனாவைரஸ் பாதிப்பால் இந்தியா திணறி போயுள்ளது.. இப்போதுதான் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி ஒருவழியாக தளர்வுகளை நோக்கி ஒவ்வொரு மாநிலமும் சென்று கொண்டிருக்கின்றன. தொற்றில் இருந்து மீண்டு வந்து கொண்டிருப்பதற்குள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது... கட்டுப்பாடுகளை தளர்த்தி இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்புவதால், பெட்ரோல் டீசலுக்கான பயன்பாடும் அதிகரித்து வருகிறது... இதனால், கச்சா எண்ணெய்க்கான தேவைகளும் அதிகரித்து வருகிறது.
பெட்ரோல்
இதுபோக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் அதிக அளவில் வரியும் விதித்து உள்ளன... இதுவும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளன.. பெட்ரோல் டீசல் விலை பெட்ரோல் டீசல் மூலம் வரும் வரிப்பணத்தை, கொரோனா தடுப்பூசிக்கான செலவுகளை மத்திய அரசு சமாளித்து கொண்டிருக்கிறது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கமும் தந்துள்ளார். இதே கருத்தை பல்வேறு அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தலைநகரங்கள்
நேற்றைய தினம், டெல்லியில் இதுவரை இல்லாத அளவாக பெட்ரோல் விலை ரூ.107.59 ஆக விற்கப்பட்டது.. மும்பையில் ரூ.113.46 ஆகவும், சென்னையில் 104.52 ரூபாயாகவும், கொல்கத்தாவில் ரூ.108.11 ஆகவும் விற்கப்பட்டது. இதைப்போல டீசல் விலை டெல்லியில் ரூ.96.32 ஆகவும், மும்பையில் ரூ.104.38 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.99.43 ஆகவும், சென்னையில் ரூ.100.59 ஆகவும் உச்சத்தில் இருந்தது.
பெட்ரோல்
இன்றைய தினம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி, நேற்றைய விலையிலே விற்பனை செய்யப்பட்டு வருகிறது... அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 104.52 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 100.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.... இப்படி நாட்டின் மாநில தலைநகரங்கள் அனைத்திலும் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.100-ஐ தாண்டிவிட்ட நிலையில், இந்த விலை உயர்வுக்கு மத்திய பாஜக அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
ராகுல்காந்தி
அந்த வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்காவும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள பதிவில், "பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் மக்களிடம் வரிக் கொள்ளை நடக்கிறது. ஏதாவது மாநிலத்தில் தேர்தல் வந்தால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்தப்படும்'' என்று கூறியுள்ளார்.
பிரியங்கா
அதேபோல, பிரியங்கா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. மக்களுக்கு தொல்லைகள் கொடுப்பதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு சாதனை படைத்துவிட்டது. மோடி அரசில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது. அரசு சொத்துக்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. மக்களின் துயரங்களும் இந்த ஆட்சியில் அதிகரித்துவிட்டன. இந்த ஆண்டில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.23.53 அதிகரித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.