"பேரழிவு.." ராகுல் காந்தி பற்றி காங்கிரஸ் சொன்ன அந்த வார்த்தை.. உடனே பாய்ந்து வந்த பாஜக! ஆவேசம்
டெல்லி: "இந்தியா" கூட்டணி சார்பில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இதற்கு பாஜக நக்கலாகப் பதில் கொடுத்துள்ளது.
நாடு முழுக்க அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் திரண்டு எதிர்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையைப் பல தலைவர்களும் எழுப்பி இருந்தனர்.

அதன் தொடர்ச்சியாகப் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இதற்கான முன்னெடுப்பை எடுத்தார். அதன்படி முதலில் பல்வேறு எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட கூட்டம் பீகார் தலைநகரில் நடந்தது. அது வெற்றிகரமான கூட்டமாக அமைந்தது.
"இந்தியா" கூட்டணி: தொடர்ந்து இரண்டாவது கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தான் மொத்தம் 26 கட்சிகளைக் கொண்ட இந்தக் கூட்டணிக்கு "இந்தியா" என்று பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ளும் என்பதையும் அவர்கள் முடிவு எடுத்தனர். வரும் காலத்தில் மும்பை, சென்னை எனப் பல இடங்களில் கூட்டம் நடத்தப்படும் என்றும் அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
முதலில் தேர்தலை ஒரே அணியில் திரண்டு எதிர்கொள்வது மட்டுமே தங்கள் நோக்கம் என்று "இந்தியா" கூட்டணி தெரிவித்தனர். யார் பிரதமர் என்பது குறித்துத் தேர்தல் முடிந்த பிறகு முடிவு செய்யப்படும் என்றே பலரும் தெரிவித்தனர். ஆனால், நேற்றைய தினம் இது தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர்கள் சில பரபர கருத்துகளைத் தெரிவித்தனர். இது இந்தியா கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் எனச் சொல்லப்படுகிறது.
பேரழிவுக்கான டிக்கெட்: இதற்கிடையே பாஜக இன்று காங்கிரஸின் ராகுல் காந்தியைக் கிண்டல் செய்யும் விதமாக கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸில் இருந்து குரல்கள் எழுந்துள்ள நிலையில், அதை நக்கலடிக்கும் விதமாக பாஜக இந்த கார்டூனை வெளியிட்டுள்ளது.
பாஜக தனது ட்விட்டரில் வெளியிட்ட கார்ட்டூனில், ராகுல் காந்தி விமானத்தில் பறப்பது போன்ற படம் இடம் பெற்றிருந்தது.. 'புத்தம் புதியது (ஆனால் பழையது)" என்று பதிவிட்டுள்ளனர் மேலும், ஹாட் ஏர் இந்தியா- பேரழிவுக்கான உங்கள் டிக்கெட்" என்றும் பதிவிட்டுள்ளனர். இதனை பாஜக ஆதரவாளர்கள் பலரும் தங்கள் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

கெலாட் சொன்னது என்ன: 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி இருக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் கூறிய நிலையில், அதை நக்கலடிக்கும் விதமாக கெலாட் இப்படிப் பதிவிட்டுள்ளார். அனைத்து கட்சிகளும் விரிவான ஆலோசனைக்குப் பின்னரே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கெலாட் மேலும் கூறுகையில், "ஒவ்வொரு தேர்தலிலும் உள்ளூர் அளவில் பல பிரச்சினைகள் இருக்கும்.. அதுதான் தேர்தலில் முக்கியமானதாக இருக்கும்.. ஆனால், இந்த நேரத்தில் நாடு முழுக்க ஒரு வித அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அந்த அழுத்தம் தான் இப்போது பல்வேறு கட்சிகளையும் ஒன்றாக இணைத்துள்ளது. இந்த அழுத்தத்தை ஏற்படுத்தியது வேறு யாரும் இல்லை. மத்திய அரசின் மீது அதிருப்தியில் இருக்கும் மக்கள்தான்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications