இதுதான் மோடி அரசு ஸ்டைல்.. ட்விட்டரில் 'ஸ்க்ரீன் ஷாட்டை' ஷேர் செய்து.. ஆவேசமான ராகுல் காந்தி
டெல்லி: "இழுத்து மூடுவது, துண்டிப்பது, அடக்கி ஒடுக்குவது, இதுதான் மோடி ஸ்டைல் அரசு" என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி.
டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக விவசாய சங்க முக்கிய தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன.
இந்தநிலையில், டுவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டதாக வெளியான ஆன்லைன் செய்தியை, ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ராகுல்காந்தி. அதில்தான் இவ்வாறு ஒரு கருத்தை அவர் பதிவு செய்துள்ளார்.
நடு ரோட்டில் எழுந்த சுவர்கள்.. கூர்மையான ஆணிகள்.. இதுவரை நாடு காணாத கெடுபிடி!
|
டுவிட்டர் கணக்குகள்
மத்திய அரசு சுமார் 250 ட்விட்டர் பயனர் கணக்குகளை முடக்குமாறு ட்விட்டர் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. போலியான தகவல்களை பரப்புவது, வன்முறையைத் தூண்டுவது உள்ளிட்ட செயல்கள், அந்த டுவிட்டர் கணக்கு வழியாக ஈடுபடுவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. இதையடுத்து அதில் பல்வேறு கணக்குகளை டுவிட்டர் முடக்கியது. இந்த நிலையில் தான் ராகுல் காந்தி இதை கண்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாய சட்டங்கள்
முன்னதாக 3 தினங்கள் முன்பு பேட்டியளித்த ராகுல் காந்தி, வேளாண் சட்டங்களை தூக்கி குப்பையில் போடுங்கள் என்று மத்திய அரசுக்கு அறிவுரை கூறியிருந்தார். மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் பெரிய அளவில் பரவும் என்றும் அவர் கூறினார்.
செங்கோட்டை
செங்கோட்டை உள்ளே விவசாயிகளை அனுமதித்தது யார்? செங்கோட்டைக்கு உள்ளே போக விடாமல் காவல்துறையில் தடுக்காமல் இருந்தது ஏன்? இதன் பின்னணியில் என்ன நோக்கம் இருக்கிறது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் தெரிவிக்க வேண்டும்.
விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை
விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வரவேண்டும். விவசாய சட்டங்கள் மூன்றையும் குப்பைத் தொட்டியில் தூக்கிப் போடுவது தான் இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வாக இருக்கும். இவ்வாறு ராகுல் காந்தி அரசுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். ஆனால் ராகுல் காந்தி வன்முறையை தூண்டுவதாக பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.