பணக் கட்டுகளை 10 ஆண்டுகளாக எண்ணிக்கொண்டே இருக்கிறது பாஜக.. பாய்ந்து வந்த ராகுல் காந்தி!
டெல்லி: பாஜக டெம்போவில் கோடீஸ்வரர்களிடமிருந்து பெற்ற பண நோட்டுகளை 10 ஆண்டுகளாக எண்ணிக்கொண்டிருக்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. 4வது கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரங்களின்போது பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றி விடுவார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசி வருகிறார். அதேபோல், காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் இடஒதுக்கீடு அனைத்தையும் முஸ்லிம்களுக்கு ஒதுக்குவார்கள் என்றும், மக்களின் சொத்துகளை பறித்துக் கொள்வார்கள், அயோத்தி ராமர் கோயிலை மூடி விடுவார்கள் என்று பிரதமர் மோடி பேசி வருகிறார்.
மேலும், அண்மையில் பிரதமர் மோடி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதானி மற்றும் அம்பானியிடம் இருந்து டெம்போக்களில் காங்கிரஸ் கட்சிக்கு பணம் சென்றுள்ளது, அதனால் தான் சமீபமாக ராகுல் காந்தி அதானி, அம்பானி பற்றி பேசுவதில்லை எனக் கூறினார். அதற்கு ராகுல் காந்தி, டெம்போவில் பணம் பெற்றதாக தனது சொந்த அனுபவத்தில் பிரதமர் பேசியுள்ளாரா என விமர்சித்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, மக்களவைத் தேர்தல் தொடர்பாக நேருக்கு நேர் விவாதம் நடத்த வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூத்த பத்திரிகையாளர் என்.ராம், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோக்கூர், ஓய்வு பெற்ற டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஜீத் பி.ஷா ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில், "பாஜக, காங்கிரஸ் இரண்டுமே தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகள் என்பதால், பொதுமக்கள் தங்கள் தலைவர்களிடம் நேரடியாகக் கேட்கத் தகுதியானவர்கள். பிரதமர் மோடி எப்போது விவாதத்தில் பங்கேற்க ஒப்புக்கொள்கிறார் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்தவும். நாங்கள் தயார்" என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி விவாதத்தில் பங்கேற்பது தொடர்பாக இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அதேசமயம், பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி, "இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியாக இல்லாத போது, பிரதமர் மோடி போன்ற உயர் பதவியில் இருப்பவருடன் எப்படி அவரால் விவாதிக்க முடியும்" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்நிலையில், ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் கோடீஸ்வரர்களிடம் இருந்து டெம்போக்களில் பெற்ற 'நோட்டுகளை' எண்ணுகிறார்கள். நாங்கள் 'சாதிக் கணக்கெடுப்பு' மூலம் நாட்டை எக்ஸ்ரே செய்வோம். ஒவ்வொரு பிரிவினருக்கும் சமமான பங்களிப்பை உறுதி செய்வோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக பாஜக அரசை விமர்சிக்கும் கட்சி விளம்பரத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அதானியும் அம்பானியும் கறுப்புப் பணத்தை அனுப்பினார்களா என்பது குறித்து சிபிஐ அல்லது அமலாக்கத்துறை விசாரணைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications