லட்சத்தீவு: ''அறிவற்றவர்கள் இந்திய கடலின் ஆபரணத்தை அழிக்கின்றனர்''.. மத்திய அரசு மீது பாய்ந்த ராகுல்
டெல்லி: லட்சத்தீவை மத்திய அரசு அழிக்க முயற்சிப்பதாகவும், தான் லட்சத்தீவு மக்களுடன் நிற்பதாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video
மத்திய அரசின் புதிய விதிமுறைகள் லட்சத்தீவு மக்களை பாதிக்கிறது என்று லட்சத்தீவு பாஜக தலைவர் முகமது காசிம் கூறியுள்ளார்.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் அரபிக்கடலில் வீற்றிருக்கிறது லட்சத்தீவு.

லட்சத்தீவில் சர்ச்சை அலைகள்
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் சுமார் 65 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இயற்கை அழகை அள்ளி பூசிக்கொண்டுள்ள லட்சத்தீவில் சுற்றுலாத் துறை வருவாய் ஈட்டும் முதுகெலும்பாக உள்ளது. மீன்பிடித் தொழிலும் பிரதானமாக விளங்குகிறது. பொதுவாக அமைதியின் பிறப்பிடம் என்று வர்ணிக்கப்படும் லட்சத்தீவில் தற்போது மத்திய அரசு மூலமாக சர்ச்சை அலைகள் எழுந்துள்ளன.

காரணம் என்ன?
பொதுவாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளால் நிர்வாகம் செய்யப்படும் லட்சத்தீவில் தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் பிரஃபுல் படேலை நிர்வாகியாக நியமித்துள்ளது மத்திய அரசு. அங்குள்ள மக்களுக்கு எதிராக பிரஃபுல் படேல் எடுக்கும் நடவடிக்கைதான் மொத்த சர்ச்சைக்கும் காரணம். அதாவது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான அங்கு மாட்டிறைச்சிக்கு தடை, பள்ளிகளில் அசைவ உணவுக்கு தடை, மதுபான விற்பனைக்கு அனுமதி, தனக்கு சாதகமான அரசு ஊழியர்களை நியமித்து வருவது என சர்வாதிகாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரஃபுல் படேல்.

மத்திய அரசுக்கு கண்டனம்
மக்கள் விரோத போக்கில் ஈடுபட்டு வரும் பிரஃபுல் படேலை நீக்கிவிட்டு அரசியல் தொடர்பில்லாத ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று குரல்கள் வலுத்துள்ளன. save Lakshadweep என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரசின் பிரியங்கா காந்தி என பலரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராகுல் ஆதரவு
இந்த நிலையில் லட்சத்தீவு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், '' லட்சத்தீவுகள் இந்திய கடலின் ஆபரணமாகும். அறிவற்ற பெரியவர்கள்(மத்திய அரசு) அதிகாரம் மூலம் அதனை சிதைக்கின்றனர். நான் லட்சத்தீவு மக்களுடன் நிற்கிறேன்'' என்று கூறினார்.

மத்திய அரசுக்கு பாஜக தலைவர் எதிர்ப்பு
இதற்கிடையே புதிய விதிமுறைகள் லட்சத்தீவு மக்களை பாதிக்கிறது என்று லட்சத்தீவு பாஜக தலைவர் முகமது காசிம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ' சில புதிய விதிமுறைகள் லட்சத்தீவு குடிமக்களுக்கு வருத்தத்தை அளிக்கின்றன. மக்களை வருத்தப்படுத்தும் விதிகளை அகற்ற விரும்புகிறோம். புதிய விதிகள் அவர்களுக்கு நல்லதல்ல என்றால், அவற்றை அகற்றுவதற்காக நாங்கள் செயல்படுவோம். இது குறித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்' என்றார்.












Click it and Unblock the Notifications