ம.பி., ராஜஸ்தான் முதல்வர் பதவி ரேஸில் 4 பேர்.. ராகுல் காந்தியுடன் அடுத்தடுத்து இன்று சந்திப்பு
Recommended Video
டெல்லி: ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களுக்கான முதல்வர்களை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று முடிவு செய்ய உள்ளார். இதையொட்டி, அம்மாநில முதல்வர் பதவிக்கான ரேஸில் உள்ள முக்கிய தலைவர்கள், ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி வந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகிய இருவரில் ஒருவர் முதல்வராக வாய்ப்பு உள்ளது. மத்திய பிரதேசத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் முதல்வர் பதவிக்கான பந்தயத்தில் உள்ளனர்.
யாரை முதல்வராக தேர்ந்தெடுப்பது என்பது குறித்து ராகுல் காந்தியே முடிவு எடுக்கலாம் என்று அம்மாநில எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்துவதற்காக சச்சின் பைலட், அசோக் கெலாட், கமல்நாத், ஜோதிராத்திய சிந்தியா ஆகியோர் டெல்லி வந்துள்ளனர்.
கமல்நாத் மற்றும் ஜோதிராத்திய சிந்தியா ஆகிய, இருவரும் காங்கிரஸ் கட்சியின் ம.பி. பொறுப்பாளர் ஏ.கே.அந்தோணியை சந்தித்து முதலில் ஆலோசிப்பார்கள். அதேபோல ராஜஸ்தான் பொறுப்பாளர், கே.சி.வேணுகோபால் ஆகியோரை சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு அதன் பிறகு ராகுல் காந்தியை சந்திக்க உள்ளனர்.
இரு மாநிலங்களுக்குமான முதல்வர்கள் யார் என்பதை ராகுல்காந்தி இன்றே முடிவு செய்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.