பட்ஜெட் நாளில் அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி... அமெரிக்கா பறந்தார் பிரியங்கா காந்தி
டெல்லி: மருத்துவ பரிசோதனைக்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி இன்று அமெரிக்காவுக்கு செல்கிறார். அவருடன் ராகுல் காந்தியும் பயணம் மேற்கொள்கிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவுக்கு கடந்த 2010-ம் ஆண்டு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பிறகு, அரசியல் செயல்பாடுகளில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த அவர், ராகுல் காந்தியிடம், கட்சி தலைவர் பொறுப்பை ஒப்படைத்தார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்காந்தி, தற்போது காங்கிரஸ் கட்சிக்கு யாரை தலைவராக நியமிக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், மருத்துவ பரிசோதனைக்காக சோனியா இன்று அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். அவருடன் ராகுலும் பயணமாகிறார். வழக்கமாக சோனியா அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு புறப்பட்டு செல்லும் போது ராகுல் அல்லது பிரியங்கா உடன் செல்வார்கள்.
பிரியங்கா ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளார். அவரது கணவர் ராபர்ட் வதேராவுக்கு சிறிய கட்டி ஒன்றை அறுவை சிகிச்சை செய்து அகற்ற உள்ளனர். இதற்காக ராபர்ட்டும், பிரியங்காவும் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். சோனியா அமெரிக்கா சென்று சேர்ந்ததும் அவருடன் பிரியங்கா இணைந்து கொள்ள உள்ளார். சோனியா, பிரியங்கா, ராகுல் மூவரும் சுமார் 2 வாரம் அமெரிக்காவில் தங்கி இருப்பார்கள் என்று தெரிகிறது. ராகுல் காந்தி நாடு திரும்பிய உடன், கட்சி தலைவரின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.