"மோடி" பேச்சு.. 2 ஆண்டு சிறை- ராகுல் மன்னிப்பு கூட கேட்கலையே.. உச்சநீதிமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ.
டெல்லி: மோடி தொடர்பான அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட போதும் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் குஜராத் பாஜக எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் லோக்சபா தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நாட்டை விட்டு தப்பி ஓடுகிற மோசடி பேர்வழிகள் மோடி என்ற பெயர் கொண்டவர்களாகவே இருக்கின்றனர் என்றார். இது மோடி சமூகத்தை இழிவுபடுத்துவதாக கூறி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ. புருனேஷ் மோடி இவ்வழக்கை தொடர்ந்தார்.

2 ஆண்டு ஜெயில் தண்டனை: இந்த வழக்கை விசாரித்த குஜராத்தின் சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்காக 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது சூரத் நீதிமன்றம்.
எம்பி பதவி தகுதி நீக்கம்: அவதூறு வழகில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் ராகுல் காந்தி எம்பி பதவி உடனடியாக பறிக்கப்பட்டது. மேலும் ராகுல் காந்தி வெற்றி பெற்ற கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது. டெல்லியில் ராகுல் காந்திக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவும் திரும்பப் பெறப்பட்டது.
ராகுல் மேல்முறையீடு தள்ளுபடி: பின்னர் ஏப்ரல் 3-ந் தேதி சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரி ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். ராகுல் காந்தியின் இந்த மேல்முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.
உயர்நீதிமன்றத்தில் டிஸ்மிஸ்: பின்னர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மற்றொரு மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது நடந்த விசாரணையில், ராகுல் காந்தி வென்ற வயநாடு தொகுதிக்கு 3 மாதங்களில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்கக் கூடும். அதை ராகுல் காந்தியால் தடுத்து நிறுத்த முடியாது என்பதால் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. ஆனால் குஜராத் உயர்நீதிமன்றம், ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை டிஸ்மிஸ் செய்தது.
உச்சநீதிமன்றத்தில் அப்பீல்: இதனால் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் மனுவை தாக்கல் செய்தார் ராகுல் காந்தி. இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கு தொடர்ந்த புருனேஷ் மோடி, குஜராத் அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது.
புர்னேஷ் மோடி: இதனடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்த புர்னேஷ் மோடி, ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் ராகுல் காந்தி ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை. அத்துடன் நான் காந்தி, மன்னிப்பு கேட்க சாவர்க்கர் அல்ல எனவும் ராகுல் விமர்சித்திருந்தார் என்பதையும் புருனேஷ் மோடி அதில் சுட்டிக்காட்டி இருந்தார். ராகுல் காந்தி அப்பீல் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 4-ந் தேதி நடைபெற இருக்கிறது.












Click it and Unblock the Notifications