அன்று இந்திரா.. இன்று ராகுல் காந்தி.. ஓர் ஒப்பீடு.. இது நல்ல சான்ஸாகவும் இருக்கலாம்! ஏன் தெரியுமா
டெல்லி: ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சிக்குத் தேவையான திருப்பத்தையும் தரும் என்று அக்கட்சியினர் கூறுகின்றனர்.
கடந்த 2019 மக்களவை தேர்தலை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலை எதிர்கொண்டது. அந்த சமயம் ராகுல் காந்தி நாடு முழுக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார்.
அந்த சமயத்தில் ராகுல் காந்தி கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது கோலர் பகுதியில் ராகுல் காந்தி பிரசாரம் செய்த போது சொன்ன கருத்துகள் தான் இப்போது காங்கிரசுக்குப் பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தி
கர்நாடகாவில் பேசிய ராகுல் காந்தி, மோடி என்ற பெயர் கொண்ட அனைவரும் ஒரே போல இருப்பதாக விமர்சித்தார். அதன் பிறகு சர்ச்சைக்குரிய வார்த்தையையும் அவர் குறிப்பிட்டார். இது அப்போதே சர்ச்சையான நிலையில், மோடி என்ற பெயர் வைத்துள்ளவர்களை அவர் அவமதித்து விட்டதாகப் புகார்கள் எழுந்தன. மோடி சமூகத்தையே ராகுல் காந்தி இழிவுபடுத்திவிட்டதாகக் குஜராத் பாஜக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். ராகுல் காந்திக்கு எதிரான இந்த கிரிமனல் அவதூறு வழக்கு சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று ராகுல் காந்தியைக் குற்றவாளியாக அறிவித்து மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா தீர்ப்பளித்தார்.

போட்டியிட முடியாது
மேலும், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் ராகுல் காந்தி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் வகையில் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீனும் வழங்கியது. இருப்பினும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அவர் எம்பி பதவியை இழக்கக் கூடும் என்று சொல்லப்பட்டது. இதற்கிடையே ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு இப்போது வயது 52 ஆகும். தண்டனை பெறும் 2 + 6 ஆண்டுகள் என்பதால் அவருக்கு 60 வயது வரை, எம்பி மற்றும் பிரதமர் பதவிக்கு வர முடியாது.. எனவே எடுத்து 64 வயதில் தான் அவர் 2034 மக்களவை தேர்தலில் களமிறங்கவே முடியும்.

போராட்டம்
இது மட்டுமின்றி அமலாக்கத் துறை விசாரிக்கும் நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கும் வரும் காலத்தில் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் ஏற்கனவே இக்கட்டான சூழலில் உள்ள நிலையில் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்து சில ஆண்டுகளாகவே பல முக்கிய தலைவர்கள் விலகி வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் நேரடியாக பாஜகவில் தான் ஐக்கியமாகிறார்கள். 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸும் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக ராகுல் காந்தியே ஸ்மிருதி ராணியிடம் அமேதியில் தோல்வியடைந்தார். அப்போது அவர் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட முடிந்ததால் அவரால் எம்பியாக முடிந்தது.

1977 சம்பவம்
இப்போது ராகுல் தண்டனைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் இதை 1977இல் ஏற்பட்ட சூழலைப் போல இருக்கும் என்றும் கூறப்படுகின்றனர். அந்த காலகட்டத்தில் எமர்ஜென்சிக்கு பிறகு, இந்திரா காந்தி மற்றும் காங்கிரஸ் மக்களவை தேர்தலில் மிகப் பெரியளவில் தோல்வியடைந்தது. அவர் சிபிஐ விசாரணைக்கும் ஆஜராக நேர்ந்தது.. அந்த சமயத்தில் தான் பழிவாங்கப்படுவதைப் போல வெளிப்படுத்திய இந்திரா காந்தி, அதன் பின்னர் தன்னை போராளியாகவும் காட்டிக் கொண்டார். பீகாரில் உள்ள பெல்ச்சி கிராமத்தில் தாழ்த்தப்பட்டோரை உயர் சாதியினர் கொலை செய்த விவகாரத்தைக் கையில் எடுத்தார்.

இந்திரா காந்தி
அங்குப் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க முடிவு செய்தார். ரயில், ஜீப், டிராக்டரில் கொட்டும் மழைக்கு நடுவிலும் சென்றார்.. ஒரு கட்டத்தில் யானைச் சவாரி செய்ய வேண்டியிருந்தது. அது அனைத்தையும் செய்து, அவர் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்தார். இது அவரது இமேஜை மாற்றப் பெரியளவில் உதவியது. அப்போது நாடு முழுக்க பிரச்சாரம் செய்த அவர், மக்களை சந்தித்தார். இது 1980இல் அவர் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றக் காரணமாக அமைந்தது. எனவே ராகுல் மீதான இந்த நடவடிக்கை நல்லது என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

ராகுல் காத்திருக்க வேண்டும்
ஆனால், இப்போது அதேநிலை ஏற்படும் என்று சொல்ல முடியாது. அப்போது ஜனதா கட்சிக்கு போதிய எண்ணிக்கை இல்லாமல் இருந்தது. இதனால் பிரதமர் மொரார்ஜி தேசாயை ஓரம்கட்டி, சரண் சிங்கை கொண்டு வந்த காங்கிரஸ், பின்னர் அவரையும் காலி செய்து தேர்தலுக்கு வித்திட்டது. ஆனால், இப்போது, அந்த நிலை இல்லை. பாஜக அசுர பலத்துடன் இருக்கிறது. மேலும், ராகுல் காந்தி ஒன்றும் இந்திரா காந்தி இல்லை. அவர் தேர்தல் அரசியலிலும் எம்பியாகவும் இருந்து அரசியல் அரங்கில் காத்திருக்க வேண்டும். தனக்கான வாய்ப்பை காத்திருந்து பயன்படுத்த வேண்டும். ராகுல் காந்திக்கு இன்னும் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

நல்ல விஷயம்
அதேநேரம் இது காங்கிரசுக்கு முழுமையாகக் கெட்ட செய்தி என்று மட்டும் சொல்ல முடியாது.. எம்பியாக இருக்க முடியவில்லை என்றாலும் காங்கிரஸ் கட்சியை பாஜகவை எதிர்கொள்ளும் அளவுக்கு வலுவான ஒரு கட்சியாக உருமாற்றம் செய்யவும் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளைக் கொண்டு வரவும் ராகுல் காந்திக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கலாம். அசுர பலத்துடன் இருக்கும் பாஜகவை தொடர்ந்து ஆதாரத்துடனும் ஆக்கப்பூர்வமாகவும் விமர்சித்து வந்தால் மட்டுமே அது மக்கள் அரங்கில் எடுபடும் என்பதால் அதை நோக்கியும் ராகுல் காந்தி இறங்க வேண்டும். இதை வைத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் ஈடுபட வேண்டும்.

வாய்ப்பு
மேலும், அடுத்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்தியால் போட்டியிட முடியாது என்பதால் ராகுல் vs மோடி என்ற பேச்சும் இருக்காது. எனவே, இது பிரியங்கா காந்திக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கலாம். பிரியங்கா காந்தி பார்க்க அவரது பாட்டி இந்திரா காந்தியைப் போலவே இருப்பது முதல் பல பாயிண்ட்கள் அவருக்கு ஆதரவாக இருக்கிறது. உபி தேர்தலில் அவரால் காங்கிரஸுகுக்கு குறிப்பிடத் தகுந்த வெற்றியைத் தர முடியவில்லை என்றாலும் கூட அவருக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கலாம். மேலும், மோடிக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியில் கொண்டு வரவும் கார்கேவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பை தரும்.












Click it and Unblock the Notifications