லோக்சபாவில் ஜனநாயகம் இல்லை! நான் பேச எழுந்தாலே.. கொந்தளித்த ராகுல் காந்தி.. பரபர குற்றச்சாட்டு
டெல்லி: நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை என்றும், லோக்சபா ஜனநாயகம் இல்லாத வகையில் நடப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லா பேசும்போது ராகுல் காந்தியை நோக்கி அவை விதிகளை பின்பற்றுமாறு அறிவுரை கூறியிருந்தார். ஆனால் அதற்கு பதில் தெரிவிக்க ராகுல் காந்தி எழுந்த போது, அவையை ஒத்திவைப்பதாக கூறிவிட்டு ஓம் பிர்லா வெளியே சென்றார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த 10 ஆம் தேதி முதல் கூடி நடைபெற்று வருகிறது. அப்போதில் இருந்தே எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று லோக்சபாவில் சபாநாயக ஓம் பிர்லா பேசும்போது, " லோக்சபா உறுப்பினர்களின் நடத்தை தொடர்பாக பல்வேறு புகார்கள் என் கவனத்திற்கு வந்துள்ளன.

அவையில் தந்தை - மகள், தாய் - மகள், கணவன் - மனைவி என பல்வேறு தரப்பினரும் உறுப்பினராக இருக்கின்றபோது, உறுப்பினர்களுக்கான நடத்தை விதி 349-ன்படி எதிர்க்கட்சித் தலைவர் நடந்து கொள்வார் என்று எதிர்ப்பார்க்கிறேன்" என்று பேசினார். உடனே அவையில் இருந்த ராகுல் காந்தி எதோ பேச முயன்றார். ஆனால் அதற்குள் சபாநாயகர் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். மேலும் இதற்கான காரணம் என்ன என்பதையும் அவர் கூறாமல் சென்றிருந்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, லோக்சபாவில் ஜனநாயகம் இல்லை என்றும், நான் பேசுவதற்கு எழுந்தாலே சபாநாயகர் அனுமதி கொடுப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினார். ராகுல் காந்தி பேசுகையில், "அவையில் சபாநாயகர் எனக்கு அறிவுரை கூறினார். ஆனால் அவர் என்ன பேசினார் என்றே தெரியவில்லை. எல்லாமே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்.
ஏன் என்று கேட்பதற்குள் அவையை ஒத்திவைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார். என்னை பற்றி நீங்கள் பேசும் போது, அதற்கு என்னுடைய பதில் என்ன என்பதை கேட்கவும் அனுமதிக்க வேண்டும் என்று நான் கேட்டேன். ஆனால் ஒற்றை வார்த்தை கூட பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். எந்த காரணமும் இல்லாமல் அவையை ஒத்திவைத்திவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார்.
நாடாளுமன்ற அவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற ஒரு மரபு இருக்கிறது. ஆனால் நான் எப்போது பேச எழுந்தாலும் என்னை பேச அனுமதிப்பது இல்லை. நான் அமைதியாக தான் இருந்தேன். கடந்த ஒரு வாரமாக நான் எதுவும் பேசவில்லை. பேச அனுமதிக்கவில்லை. அவை எப்படி நடத்தப்படுகிறது? ஜனநாயகத்தில் அரசுக்கு ஒரு இடம் உண்டு. எதிர்க்கட்சிக்கு ஒரு இடம் உண்டு. ஆனால் இங்கே எதிர்க்கட்சிகளுக்கு எந்த இடமும் இல்லை. ஜனநாயகமற்ற முறையில் லோக்சபா நடத்தப்படுகிறது" இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக லோக்சபாவில் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததை காங்கிரஸ் கட்சி கண்டித்தது. மேலும் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து பேசினர்.












Click it and Unblock the Notifications