அனுபவம் வெல்லும்...சிறு பிள்ளைக வெள்ளாமை வீடு சேராது...நிரூபித்த தேர்தல்- மவுனமாக இருக்கும் ராகுல்!
Recommended Video
டெல்லி: ஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருமிதப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 17 மாநிலங்களில் நடைபெற்ற 51 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் 12-ல் காங்கிரஸ் வென்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி தலைமையில் கடந்த லோக்சபா தேர்தலை காங்கிரஸ் எதிர்கொண்டு தோல்வியைத் தழுவியது. அமேதி தொகுதியில் ராகுல் காந்தியே தோற்றுப் போனார்.
ராகுல் காந்தி, தமது இளைஞர் படையை நம்பி தேர்தலை எதிர்கொண்டார். அதனால் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தேர்தல் அனுபவங்களை வெளிப்படுத்த வாய்ப்பு தராமல் போனது.

கட்சித் தலைவர் பதவி ராஜினாமா
இதுவும் காங்கிரஸுக்கான பெரும் பின்னடைவாகிப் போனது. இதனால் கட்சித் தலைவர் பதவியே வேண்டாம் என ராகுல் திட்டவட்டமாக முடிவெடுத்தார். இதனை வேறுவழியே இல்லாமல் காங்கிரஸ் காரிய கமிட்டியும் ஏற்றுக் கொண்டது.

திடீர் பிரசாரம்
இதன்பின்னர் காங்கிரஸ் கட்சி நடவடிக்கைகளில் ராகுல் காந்தி தீவிரம் காட்டவில்லை. தற்போதைய மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தலில் தாமும் பிரசாரம் செய்தேன் என்பதாக மட்டுமே அவரது செயல்பாடு இருந்தது.

ராகுல் ஆதரவாளர் தன்வார்
ஹரியானாவில் ராகுலின் ஆதரவாளரான அசோக் குமார் தன்வார், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக தூக்கப்பட்டு குமாரி செல்ஜா நியமிக்கப்பட்டார். இதற்கு எதிராக அசோக் குமார் தன்வார் போர்க்கொடி தூக்கியதுடன் காங்கிரஸுக்கு எதிராக தேர்தல் பணியாற்றினார்.

களப்பணியில் மூத்த தலைவர்கள்
அதேபோல் மகாராஷ்டிராவில் மிலிந்த் தியாரோவும் தேர்தல் பணியாற்றவில்லை. ஆனால் இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் களப்பணியாற்றினர். இதனால் காங்கிரஸுக்கு பெருமிதமான வெற்றி கிடைத்திருக்கிறது.

தேர்தலுக்கு பின் சோனியா, பிரியங்கா
சட்டசபை தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங்ஹூடாவை போனில் அழைத்து சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். உத்தரப்பிரதேச சுற்றுப்பயணத்தில் இருந்த பிரியங்கா காந்தியும் தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கின்றன என்றார்.

அமைதி காக்கும் ராகுல்
தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் சோனியா காந்தியை ராகுல் காந்தி சந்தித்து பேசினார். ஆனால் தேர்தல் முடிவுகள் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் ராகுல் காந்தி தெரிவிக்கவில்லை. கடந்த 2 நாட்களாக அவரது ட்விட்டர் பக்கம் மவுனித்து கிடக்கிறது.

மவுனத்தின் பின்னணி?
லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தியின் இளைஞர் பட்டாளம் சாதிக்க முடியாததை அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இம்முறை சாதித்துவிட்டார்கள். அதனால்தான் என்னவோ ராகுல் மவுனமாக இருக்கிறாரோ? என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது.












Click it and Unblock the Notifications