விடாது துரத்தும் நேஷனல் ஹெரால்டு வழக்கு.. இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜரான ராகுல் காந்தி
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்று 5ஆவது நாளாக அமலாக்கத் துறை விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராகி உள்ளார்.
சுதந்திர போராட்ட காலத்தில் தொடங்கப்பட்டு நஷ்டத்தில் இயங்கி வந்த நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகை நிறுவனத்தின் பங்குகள் கடந்த 2010இல் யங் இந்தியா என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன.
யங் இந்தியா நிறுவனத்தின் 76% பங்குகள் சோனியா காந்தி, ராகுல் காந்தி வசம் இருந்ததால் இந்த விவகாரம் சர்ச்சையானது. இது தொடர்பாக சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்து இருந்தார்.

வழக்கு
மேலும், அமலாக்கத் துறையும் அன்னிய செலாவணி வழக்கைத் தொடர்ந்தது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. சோனியா காந்தி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த வாரம் ராகுல் காந்தி மட்டும் விசாரணைக்கு ஆஜரானார்.

விசாரணை
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மொத்தம் 30 மணி நேரம் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தாயாரைச் சந்திக்க வேண்டும் என்பதால் சில நாட்கள் இடைவெளியில் மீண்டும் அவர் நேற்று ஆஜரானார். இதுவரை மொத்தம் 4 நாட்கள் விசாரணை நடந்துள்ள நிலையில், மொத்தம் 40 மணி நேரம் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் கேள்விகளால் துளைத்து எடுத்து உள்ளனர்.

மீண்டும் சம்மன்
இந்தச் சூழலில் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி அவர் இப்போது டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். முன்னதாக கடந்த வாரம் அமலாக்கத் துறையினர் ராகுல் காந்தியை விசாரிப்பதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் போராட்டத்தை நடத்தி இருந்தனர்.

சோனியா காந்தி
இதனிடையே கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பால் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு இருந்த காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நேற்றைய தினம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். உடல்நிலை பாதிப்பு காரணமாக வரும் ஜூன் 23ஆம் தேதிக்குள் அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications