சாலையில் அமர்ந்தார்.. கார்களில் அனுப்பினார்.. கண்ணீரை துடைத்த ராகுல் காந்தி.. நெகிழ்ந்த தொழிலாளர்கள்
டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான, ராகுல் காந்தி டெல்லியில் இன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேதனையையும் துன்பத்தையும் நேரில் சென்று கேட்டறிந்தார்.
கொரோனா வைரஸ் நெருக்கடி மற்றும் லாக்டவுனுக்கு மத்தியில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியின் வீதிகளில் இறங்கி குடிபெயர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்தார்.
தெற்கு டெல்லியின் சுக்தேவ் விஹார் மேம்பாலம் அருகே சென்றபோது, அங்கு பல தொழிலாளர்களைக் கண்டார். அவர்கள் அருகே அமர்ந்து ராகுல் காந்தி பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
தமிழகத்தில் இன்று 477 பேருக்கு கொரோனா.. பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு.. ஒரே நாளில் 939 பேர் டிஸ்சார்ஜ்
காங்கிரஸ் குற்றச்சாட்டு
இதையறிந்து ஊடகத்தினரும் அங்கே சென்றனர். கூடுதல் போலீசாரும் விரைந்தனர். இதற்கிடையில், ராகுலை சந்தித்த தொழிலாளர்கள் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. டெல்லி காவல்துறையும் பதிலளிக்கவில்லை.
பணம் தேவை
முன்னதாக இன்று காலை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம், ராகுல் காந்தி, மாநிலங்களின் முன்னணி ஊடகங்களின் ஊடகவியலாளர்களுடன் உரையாடினார். அப்போது, மக்களுக்கு கடன் கொடுக்கும் ஒரு கடன்காரரை போல மத்திய அரசு செயல்படக்கூடாது. அதற்கு பதிலாக அது அவர்களுக்கு நேரடி பண பரிமாற்றம் செய்ய வேண்டும், என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தி அசத்தல்
பொருளாதார தூண்டுதல் பேக்கேஜ் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில்தான், புலம் பெயர் தொழிலாளர்களை நேரில் சந்தித்து, அசத்தியுள்ளார் ராகுல் காந்தி. இதுவரை மத்திய அரசில் அமைச்சர் மட்டத்தில் உள்ளவர்கள் புலம் பெயர் தொழிலாளர்களை சந்திக்காத நிலையில், ராகுல் காந்தியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
கார்களில் கிளம்பினர்
இதையடுத்து, காங்கிரஸ் தொண்டர்கள், தங்கள் வாகனங்கள் மூலம், புலம் பெயர் தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கே அனுப்பி வைத்தனர். காரில் புறப்பட்ட தொழிலாளர்கள், கண்ணீர் மல்க, ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நன்றி தெரிவித்தது, காண்போர் கண்களை கலங்க வைத்தது.