அடுத்தடுத்த அதிரடி- கேசிஆர் மகளிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை- தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன்!
டெல்லியில் கேசிஆர் மகள் கவிதாவிடம் விசாரணை நடைபெறுகிறது; லாலு மகன் தேஜஸ்விக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லி: ரயில்வே பணிகளுக்கு நிலம் பெற்ற வழக்கு விவகாரத்தில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பி உள்ளது சிபிஐ. மேலும் மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் தெலுங்கானா முதல்வர் கேசிஆர் மகள் கவிதாவிடம் இன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
பாஜக அல்லாத எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பல்வேறு வழக்கு விசாரணைகள் துரிதப்பட்டு வருகின்றன. டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதே வழக்கில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறது அமலாக்கப் பிரிவு. இதனால் கவிதாவை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது அமலாக்கப் பிரிவு. ஆனால் தமது வீட்டுக்கு வந்து அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தட்டும் என பதில் அனுப்பினார் கவிதா. இதனை அமலாக்கப் பிரிவு ஏற்க மறுத்தது.
இதனையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் இன்று கவிதா விசாரணைக்காக ஆஜராகினார். அவரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக டெல்லியில் சந்திரசேகர ராவின் இல்லத்துக்கு கவிதா, பாரத் ராஷ்ட்ரிய சமிதியின் மூத்த தலைவரான அவரது சகோதரர் கே.டி. ராமாராவ் வருகை தந்தனர். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஏற்கனவே மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதைப் போல கவிதாவும் பல மணிநேரம் விசாரணைக்கு பின் கைது செய்யப்படலாம் எனவும் தகவல் பரவியது. இதையடுத்து டெல்லி கேசிஆர் இல்லம் முன்பாக பெருமளவும் பாரத் ராஷ்ட்ரிய சமிதி தொண்டர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது.
முன்னதாக, நாட்டின் 9 மாநிலங்களில் புறவாசல் வழியாக பாஜக நுழைந்துள்ளது; ஆனால் தெலுங்கானாவில் பாஜகவால் நுழைய முடியவில்லை. ஆகையால் என்னை பழிவாங்குகிறது பாஜக; அதனாலேயே அமலாக்கப் பிரிவு விசாரணை நடைபெறுகிறது என கூறியிருந்தார் கவிதா. இந்த நிலையில் கவிதாவிடம் விசாரணை நடைபெறுகிறது.
இதேபோல் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் இப்போது சிபிஐ விசாரணை வளையத்தில் சிக்கி இருக்கிறார். ரயில்வே நிலம் தொடர்பான வழக்கில் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர். இது தொடர்பான வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் யாதவ், ராப்ரிதேவி உட்பட 14 பேர் மீதுஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ்சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஆஜராக வேண்டும் என தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. அடுத்தடுத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மீதான வழக்கு விசாரணை, கைது நடவடிக்கைகள், ரெய்டுகள் தொடருவதால் தேசிய அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications