சொந்தக்காரங்க பாவம், முன் ஜாமீன் மனுவை சீக்கிரம் விசாரிங்க! உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு
டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் புதியதொரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தவர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 3 கோடி ரூபாயை மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில் டிசம்பர் 17-ஆம் தேதி அந்த மனு தள்ளுபடி செய்தது.

தலைமறைவு
இதையடுத்து ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படுவார் என்றதும் அவர் கடந்த வெள்ளிக்கிழமை (டிச.17) முதல் தலைமறைவானார். அவரை பிடிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜியின் வீடு, உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடுகளில் அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

சோதனை
ராஜேந்திர பாலாஜியுடன் போனில் பேசிய 600 பேரின் எண்களை வைத்தும் போலீஸார் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவை கேரளா, கொடைக்கானல், கோவைக்கு விரைந்துள்ளன. ராஜேந்திர பாலாஜி பெங்களூரில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு ஏற்கெனவே ஒரு தனிப்படை முகாமிட்டுள்ளது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார். இதனிடையே அவரது இருப்பிடம் குறித்து அவரது உறவினர்களிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் புதியதொரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

முன்ஜாமீன் மனு
அதில் "நான் எங்கே என கேட்டு எனது உறவினர்களை இரவு நேரங்களில் கூட தொந்தரவு செய்து துன்புறுத்தப்படுவதால் தனது முன்ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்குமாறும்" புதியதொரு மனுவை ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு ஜாமீன் கிடைக்குமா இல்லை மனு தள்ளுபடி செய்யப்படுமா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications