முதல்வர்களுடனான ஆலோசனையில், மோடியுடன், ராஜ்நாத்சிங், அமித் ஷா பங்கேற்பு.. பலத்த எதிர்பார்ப்பு
டெல்லி: கொரோனா பாதிப்பு தொடர்பாக இன்று, பிரதமர் நரேந்திர மோடி, 15 மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிர்வாகிகளுடன் நடத்த உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
கொரோனா பாதிப்பு தொடர்பாக விவாதிப்பதற்காக நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக 21 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியிருந்தார்.
இன்று 15 மாநில முதல்வர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். இதில், தமிழகமும் ஒன்று. இந்த நிலையில் ஆலோசனைக் கூட்டத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
சீனா மற்றும் இந்தியா இடையே எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவும் நிலையில் இவ்விரு முக்கிய அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மாநில முதல்வர்களுக்கு சீன நிலவரம் தொடர்பாக அவர்கள் விளக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
சீன ராணுவ வீரர்கள் 43 பேர் மரணமா? உண்மை என்ன? சீனா செய்த குள்ளநரித்தனம்
அதேநேரம் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் விளக்க வேண்டிய பொறுப்பிலுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர், 15 மாநில முதல்வர்களுக்கு மட்டும் எவ்வாறு விளக்கம் வழங்குவார் என்ற கேள்வியும் எழுகிறது. இருப்பினும் உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் எதற்காக இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கின்றனர் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.