காஷ்மீர் எல்லையில் 2020ல் பாகிஸ்தான் 5,133 முறை அத்துமீறியதுங்க மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங் தகவல்!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு பாகிஸ்தானால் 5,133 அத்துமீறல் சம்பவம் நடந்ததாக மாநிலங்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்த அத்துமீறல் சம்பவத்தில் 46 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.
காஷ்மீர் எல்லைக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை அனுப்புகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

5,133 அத்துமீறல் சம்பவம்
ராஜ்யசபாவில் ஒரு கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:- ஜம்மு காஷ்மீரில் சர்வதேச கட்டுப்பாட்டு எல்லை பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறி பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு பாகிஸ்தானால் 5,133 அத்துமீறல் சம்பவம் நடந்துள்ளது. இதில் 46 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் கடைபிடிக்க வேண்டும்
எல்லையில் அத்துமீறுபவர்களுக்கு பாதுகாப்பு படையினர் பொருத்தமான பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த அத்துமீறல் தொடர்பாக பாகிஸ்தானிய ராணுவ அதிகாரிகளுடன், இந்திய ராணுவ அதிகாரிகள் விவாதித்து வருகின்றனர். கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையின் புனிதத்தன்மையை பாகிஸ்தான் கடைபிடிக்க வேண்டும்.

பயங்கரவாதிகளை அனுப்புகிறது
கொரோனா வைரஸ் தொற்று இருந்தபோதிலும் பாகிஸ்தான் காஷ்மீர் கட்டுப்பாட்டுக் கோட்டில் அத்துமீறிய தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்று ராஜ்நாத் சிங் கூறினார். மேலும் உள்நாட்டு நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதா? என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

ராணுவ ரகசியம்
அதற்கு பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், ராணுவ தகவல் இயற்கையில் உணர்திறன் வாய்ந்தது. அதன் வெளிப்பாடு தேசிய பாதுகாப்பின் நலனுக்கு விரோதமானது என்பதால் அதை தெரிவிக்க இயலாது. சமீபத்தில் நடைபெற்ற மலபார் கடற்படைப் பயிற்சி, பங்கேற்கும் நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பு, இயங்கக்கூடிய தன்மை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தியது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications