பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணம் திடீர் ரத்து! ஏன்? பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்
டெல்லி: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இலங்கை செல்ல இருந்த நிலையில், திடீரென இந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக இலங்கையின் பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்து வந்த நிலையில், இந்தியா இலங்கைக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தது. ஆனால், சீனா பெரிய அளவில் இலங்கைக்கு கடன் கொடுப்பதை போல கொடுத்து தெற்கு ஆசியாவில் தன்னுடைய ஆதிக்கத்தை மெல்ல விரிவாக்கம் செய்ய தொடங்கியது. இலங்கையை இப்படி கைக்குள் போட்டுக்கொண்டதால் ஆய்வு கப்பல்களை சீனா தொடர்ந்து இந்திய பெருங்கடலில் நிலை நிறுத்தி வந்தது.

இந்நிலையில் இது போன்ற பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்றும் நாளையும் (செப்.02 மற்றும் செப்.03) ஆகிய தேதிகளில் இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள இருந்தார். இந்த பயணத்தில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே வலுவான இருதரப்பு ஒத்துழைப்புக்கு ராஜ்நாத் சிங் உறுதியாக இருக்கிறார் என்றும் விரைவில் இலங்கைக்கு செல்வதை அவர் எதிர்நோக்கி உள்ளார் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சீனாவின் கை ஓங்கி வருவதற்கு இந்த பயணம் ஒரு தடையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications