“என்னை பொறுத்தவரைக்கும்..” டெல்லி மசோதா விவாதம்! 3 ஆண்டு கால மௌனம் கலைந்தார் ரஞ்சன் கோகோய்
டெல்லி: டெல்லி சேவைகள் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் நிகழ்த்திய உரை கவனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி அரசுக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், இது குடிமைப்பணி அதிகாரிகளை நியமிப்பதிலும் தொடர்ந்தது. டெல்லி அரசு அதிகாரிகளை நியமிப்பதில் அதிகாரம் அற்றதாக இருந்ததால் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநர்தான் அதிகாரிகள் நியமனத்தில் முக்கிய பங்காற்றி வந்தார். இதனால் டெல்லி அரசுடன் கருத்து வேறுபாடு கொண்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

எனவே இந்த அதிகாரிகளுக்கும் மக்களின் பிரதிநிதிகளாக உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போன்றவர்களுக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நீடித்தது வந்தது. இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என நினைத்த டெல்லி அரசு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு தொடர்பான மனுவில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ஆளுநர் இந்த அதிகாரத்தில் தலையிடக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி, ஹீமா கோலி, பி.எஸ்.நரசிம்மா அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த விசாரணையின் முடிவில் அதாவது கடந்த 11ம் தேதி நீதிபதிகள் ஒருமனதாக இந்த வழக்கில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். இந்த உத்தரவின்படி, "மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சட்டம் இயற்றும் அதிகாரம் டெல்லி சட்டசபைக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தனர்.
இது, அதிகாரிகளின் நியமனத்தில் மாநில அரசின் உரிமையை மீண்டும் உறுதி செய்தது. இந்நிலையில் இதனை நீர்த்து போக செய்யும் விதமாக மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. தொடர்ந்து, இந்த சட்டத்தை உறுதியாக்க நாடாளுமன்றத்தில் இது தொடர்பான மசோதாவை தாக்கல் செய்தது. மக்களவையில் இந்த மசோதா நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் இதனை தோற்கடிக்கலாம் என்கிற சூழல் இருந்தது.
ஆனால் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இந்த மசோதா விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதாவது, மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 எம்பிக்களில் 111 பேர்தான் மோடி அரசை ஆதரிப்பவர்கள். அதேபோல 99 பேர் 'இந்தியா' கூட்டணியை ஆதரிப்பவர்கள் இருக்கிறார்கள். இரண்டு பக்கமும் இல்லாமல் 28 எம்பிக்கள் இருக்கிறார். தற்போது இங்கு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசுக்கு 123 எம்பிக்களின் ஆதரவு அவசியமாக இருந்தது.
இந்நிலையில்தான் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இந்த மசோதா விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவளிக்க இருப்பதாக கூறின. அதாவது ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் எம்பிக்கள் 9 பேர்+தெலுங்கு தேசம் எம்பி 1+பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்பி 9 பேர் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர். இதனால் பாஜக ஆதரவு எம்பிக்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரிக்கும். எனவே மாநிலங்களவையிலும் டெல்லி சேவைகள் மசோதா நிறைவேற வாய்ப்பிருக்கிறது.
இதற்கிடையில் இந்த மசோதா தொடர்பாக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பேசியிருந்தார். அதாவது, "என்னை பொறுத்த அளவில் இந்த மசோதா சரியானது. டெல்லி சேவைகள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இது போன்ற மசோதாக்களை இங்கு தாக்கல் செய்ய கூடாது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. வழக்கு நிலுவையில் இருக்கும்போது அவசர சட்டம் செல்லுபடியாகும்.
இந்த மசோதா முழுக்க முழுக்க சட்டப்பூர்வமானதுதான். டெல்லி போன்ற யூனியன் பிரதேசங்களுக்கு சட்டங்களை இயற்றும் உரிமை நாடாளுமன்றத்திற்கு உள்ளது" என்று கூறியுள்ளார். இவர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் தற்போதுதான் முதல் முறையாக மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications