"ராஷ்ட்ரபத்னி" வம்பில் சிக்கிக் கொண்ட ஆதிர்! "பெண்கள், பழங்குடியினர் விரோதி காங்கிரஸ்" பாஜக கொதிப்பு
டெல்லி: இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரெளபதி முர்முவை ‛ராஷ்டிர பத்னி' எனக்கூறி சர்ச்சையை கிளப்பிய காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நாடாளுமன்றம் மற்றும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் ஆக்ரோஷமாக பேசினார். தற்போது இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்திய ஜனாதிபதியாக இருந்தவர் ராம்நாத் கோவிந்த். இவரது பதவிக்காலம் கடந்த 24ம் தேதியுடன் முடிவடைந்தது. முன்னதாக புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 18 ம் தேதி நடந்தது.
இதில் பாஜகவின் தேசிய ஜனாயக கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் 21ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இரவு முழுக்க போராட்டம்.. சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா! நடந்தது என்ன?
திரெளபதி முர்மு பதவியேற்பு
இதில் திரெளபதி முர்மு வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் கடந்த 25ம் தேதி இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார். இதன்மூலம் இந்தியாவின் முதல் பழங்குடி பெண் ஜனாதிபதி என்ற பெருமையை திரெளபதி முர்மு பெற்றுள்ளார். இந்நிலையில் தான் திரெளபதி முர்முவை காங்கிரஸ் கட்சியின் எம்பியும், லோக்சபா காங்கிரஸ் குழு தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சனம் செய்துள்ளார்.
சர்ச்சையாக பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
அதாவது திரெளபதி முர்முவை 'ராஷ்டிரபத்னி' என அவர் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிரான பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் வாய்த்தவறி அந்த வார்த்தையைகூறிவிட்டதாக அவர் கூறினார். இந்நிலையில் தான் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிர்ப்பை காட்டியுள்ளார்.
ஸ்மிருதி இரானி ஆக்ரோஷம்
இதுபற்றி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று நாடாளுமன்றத்தில் ஆக்ரோஷமாக பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‛‛பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களை இழிவுப்படுத்தும் வகையில் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார். இதனால் அவர் நாடாளுமன்றம் மற்றும் பொதுவெளியில் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி உள்ளார். இருப்பினும் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியினர் பெண்களை அவதூறாக பேசி வருகின்றனர்'' என அவர் கூறியுள்ளார்.
நிர்மலா சீதாராமன் எதிர்ப்பு
மேலும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு கடும் எதிர்ப்பை காட்டியுள்ளார். காங்கிரஸ் தொடர்ந்து பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசி வருகிறது. தற்போது இந்தியாவின் ஜனாதிபதியாக உள்ள திரெளபதி முர்முவை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மிகவும் கீழ்த்தரமான வார்த்தையை பயன்படுத்தி விமர்சித்துள்ளார். இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.