சினிமாவை அரசியலில் இருந்து விலக்கி விடுங்கள்! டெல்லியில் மோடி நிகழ்ச்சியில் பேசிய ரவிமோகன்!
டெல்லி: சினிமாவை அரசியலில் இருந்து விலக்கி விடுங்கள் என ஜனநாயகன் படம் ரிலீஸ் தாமதம் குறித்து பேசுகையில் நடிகர் ரவி மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடிகர் ரவி மோகன், சினிமா மற்றும் அரசியல் இரண்டும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்றும், தானும் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராக இருப்பதால் அவரது வெற்றிக்காக பிரார்த்திப்பதாகவும் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் எல். முருகனின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த விழாவில் 'பராசக்தி' படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் ஆகிய இருவரும் பங்கேற்றனர்.
விழா முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரவி மோகன், டெல்லியின் மையப் பகுதியில் இப்படி ஒரு பொங்கல் கொண்டாட்டம் நடப்பது தமிழ் மக்களுக்குப் பெருமை என்று கூறினார். பிரதமரை சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்த அவர், "அவரின் ஆளுமை மிக பிரம்மாண்டமானது; புன்னகையுடன் எங்களை வரவேற்றார்," என்று பாராட்டினார்.
சினிமா குறித்து தனது கருத்தை ரவி மோகன் பதிவு செய்தார். "சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. அதை அப்படித்தான் பார்க்க வேண்டும். அரசியலை அதிலிருந்து விலக்கி வைக்க வேண்டும். பொழுதுபோக்குக்காக மட்டுமே படங்களைப் பார்க்க வேண்டும்; அதில் நல்லது இருந்தால் ஏற்றுக்கொள்வோம், இல்லையென்றால் விட்டுவிடலாம்," என்று அவர் வலியுறுத்தினார். மேலும், தானும் விஜய்யின் தீவிர ரசிகராக இருப்பதால், அவரது வெற்றிக்காக சாத்தியமான அனைத்து இடங்களிலும் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டார்.
நடிகர் ரவி மோகன் நடித்த 'பராசக்தி' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. சென்னை திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்த அவர், பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
"எல்லாப் படங்களும் வெற்றி பெற வேண்டுமென்றே எப்போதும் பிரார்த்திப்பேன். ஒவ்வொரு படத்திலும் பெரும் உழைப்பு உள்ளது. குழுக்கள் மாறினாலும், உழைப்பின் நேர்மை மாறாது" என்றார் ரவி மோகன்.
இத்தலைமுறையினரிடம் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தாக்கம் பற்றி கேட்டபோது, "அது இனிமேல்தான் தெரியும்" என்றார் ரவி மோகன். 'பராசக்தி' படத்திற்கு 'அபார வரவேற்பு' கிடைத்திருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். "ஹிந்தியை எதிர்க்கிறவர்கள் அல்ல, திமிரை எதிர்க்கிறவர்கள்" என்ற வசனம் படத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சினிமாவிற்கு மொழி ஒரு தடையல்ல, உணர்வுகளே முக்கியம் என ரவி மோகன் வலியுறுத்தினார். "சினிமா உணர்வு சார்ந்தது. 'பராசக்தி'யில் அந்த உணர்வுகள் அழகாக வெளிப்பட்டுள்ளன. கைதட்டல்கள் கேட்கும்போது, உணர்வுகள் சரியாக வேலை செய்ததில் மகிழ்ச்சி" என்றார்.
'ஜனநாயகன்' படம் தாமதமாவது குறித்துக் கேட்டபோது, "தம்பிகளைப் போகவிட்டுள்ளார், அண்ணன் விரைவில் பின்னாடி வரவிருக்கிறார்" என்று ரவி மோகன் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications