வாபஸ் பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள்! எவ்வளவு ரிட்டர்ன் வந்திருக்கிறது? ரிசர்வ் வங்கி அறிவிப்பு
டெல்லி: கடந்த மே மாதம், 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை 76 சதவிகிதம் 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி திடீரென டிவியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் அதிகரித்துள்ள கருப்பு பணத்தை ஒழிக்க சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அறிவித்தார். அதன்படி இன்று முதல் 500 மற்றும் 1,000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறியிருந்தார். மக்கள் இந்த நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் நீண்ட வரிசைகள் மக்கள் காத்திருந்தனர்.

மறுபுறம், பெரும் பணக்காரர்கள் தங்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற ஏஜென்ட்டுகளை பயன்படுத்தினர். நீண்ட வரிசையில் காத்திருந்த சிலர் அங்கேயே மயக்கமடைந்து உயிரிழந்தனர். இவையனைத்தும் கருப்பு பணத்தை ஒழிக்க மக்கள் செய்த தியாகம் என்று சொல்லப்பட்டது. இப்படியாக பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர், புதியதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இதனை எடுப்பதற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை புதிய 2,000 ரூபாய் நோட்டுக்கள் சரிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததைவிட இந்த நோட்டுக்களின் புழக்கம் மக்கள் மத்தியில் குறைவாகவே இருந்தது. இப்போதும் கூட இந்திய கிராமங்களில் ஒரு நாள் வருவாய் 100 ரூபாய் கூட கிடைக்காமல் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்கும் போது 2,000 ரூபாய் நோட்டுக்கான தேவை எதுவும் பெரியதாக எழவில்லை. எனவே இதன் பயன்பாடு வெகுவாக குறைந்தது.
ஒரு கட்டத்தில் அதாவது 2018-2019ம் ஆண்டில் இந்த நோட்டுகள் அச்சடிக்கப்படுவதே முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இதனையடுத்து 'தூய்மையான ரூபாய் தாள் கொள்கையின்படி' இந்த ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. மே 23 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை இந்த 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம், இந்த கால கெடுவுக்கு பின்னர் இந்த நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இந்நிலையில், தற்போது வரை 76 சதவிகிதம் 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயால் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 30ம் தேதி வரை சுமார் ரூ.2.72 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெற வேண்டியுள்ளது. இதில் தற்போது வரை 76 சதவிகித 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டுள்ளன.
இவ்வாறாக பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளில் 87 சதவிகிதம் வங்கிகளில் டெபாசிட்களாகவும் 13 சதவிகிதம் ரூபாய் நோட்டுகளாகவும் மாற்றப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களில் மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை விரைவில் மாற்றிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோது. இது கடைசி நேர நெருக்கடிகளை தவிர்க உதவும்" என்று கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications