EMI கட்டாவிட்டால் இனி செல்போன்கள் முடக்கப்படும்.. ரிசர்வ் வங்கி கொண்டு வரும் புதிய ரூல்ஸ்.. ஷாக் தகவல்
டெல்லி: இனி செல்போன்களை இஎம்ஐ-யில் வாங்கிவிட்டு மாதாந்திர தவணை தொகையை செலுத்தாவிட்டால் அந்த செல்போன்களை முடக்கும் வகையிலான ரூல்ஸை ரிசர்வ் வங்கி கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது பலரும் வங்கி கடன் வாங்கி வீடு கட்டுகிறோம். அதன்பிறகு கார், பைக் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை இஎம்ஐ-யில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இஎம்ஐ-யில் பொருட்களை வாங்கும்போது முதலில் குறைந்த பணத்தை கொடுத்தால் போதும். அதன்பிறகு மாதம் மாதம் தவணை தொகையை செலுத்தினால் போதும்.

இதனால் பலரும் இஎம்ஐ-யை தேர்வு செய்கின்றனர். அதேபோல் பலரும் செல்போனையும் இஎம்ஐ -யில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். பைக், கார் உள்ளிட்டவற்றுக்கான இஎம்ஐ-யை செலுத்தாவிட்டால் அந்த நிறுவனங்கள் அதனை எடுத்து சென்று விடுகின்றனர்.
அதேபோல் இஎம்ஐ-யில் செல்போன் வாங்கிவிட்டு மாதாந்திர தவணை தொகையை செலுத்தாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி ரூல்ஸ் கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது செல்போன் கடனை திருப்பி செலுத்தாவிட்டால் அதன் இயக்கத்தை முடக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுபற்றி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
நம் நாட்டின் நிதித்துறையில் வராக்கடன்களை குறைப்பதை நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி முன்னெடுக்க உள்ளதாம். இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. நம் நாட்டை எடுத்து கொண்டால் செல்பான் உள்பட மின்னணு சாதனங்களில் 3ல் ஒரு பங்கு இஎம்ஐ மூலமாக வாங்கப்படுவதாக 2024ம் ஆண்டில் ‛ஹோம் கிரெடிட் ஃபைனான்ஸ்' நடத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.
முன்னதாக இஎம்ஐ கட்டாவிட்டால் சம்பந்தப்பட்டவர்களின் செல்போன்களை லாக் செய்ய வேண்டாம் என்று கடந்த 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. அதாவது செல்போனை இஎம்ஐ-யில் வாங்கும்போது அதில் பிரத்யேகமாக ஒரு செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும். அதன்பிறகு செல்போன் வாங்கியவர் இஎம்ஐ செலுத்தாவிட்டால் அந்த செயலி உதவியுடன் செல்போன் முடக்கப்பட்டு விடும். அதன்பிறகு இஎம்ஐ தொகையை செலுத்திய பிறகு மீண்டும் செல்போன் செயல்பாட்டுக்கு வரும்.
இத்தகைய முறை கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் இந்த முறையை கொண்டு வரும் வகையில் ரிசர்வ் வங்கி ரூல்ஸை மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அமலுக்கு வரும் பட்சத்தில் செல்போனை இஎம்ஐ-யில் வாங்குவோர் அதனை முறையாக செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் செல்போன் முடங்குவது உறுதியாகி விடும். இதுபற்றி ரிசர்வ் வங்கியின் செய்தி தொடர்பாளரிடம் கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications