ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.. திட்டவட்டமாக சொன்ன ரிசர்வ் வங்கி! அப்போ இஎம்ஐ குறையுமா?
டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் எனப் பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை ரெப்போ ரேட்களை மாற்றி அமைக்கும். அதன்படி ரெப்போ வட்டி விகிதம் குறித்த ஆர்பிஐ ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ரெப்போ வட்டி விகிதம் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாம் செலுத்தும் இஎம்ஐ பொதுவாக இந்த ரெப்போ வட்டி விகிதத்தைப் பொறுத்தே மாறுபடும். இதனை மாற்றி அமைப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை ஆலோசனை நடத்தும். பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் எனப் பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டு இதை மாற்றி அமைப்பது குறித்த முடிவை ரிசர்வ் வங்கி எடுக்கும்.

இன்று ஆலோசனை
அதன்படி இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்த சூழலில், ரெப்போ வட்டி விகிதம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.. ரெப்போ வட்டி விகிதம் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில், அதுவே இப்போது தொடர்கிறது.
பணவீக்கம், சர்வதேச நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் வருமான வரி அடுக்குகள் மற்றும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி மறுசீரமைப்பு என எல்லாவற்றையும் சேர்த்தே ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது.
முன்னதாக ப்ளூம்பெர்க் நடத்திய ஆய்வின்படி, 38 பொருளாதார வல்லுநர்களில் 24 பேர் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றாமல் இதே 5.5%ஆக வைத்திருக்கும் என்றனர். அதேசமயம் 14 பேர் வட்டி விகிதம் 0.25% குறைக்கப்படலாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
காரணங்கள்
நாட்டின் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் 2%-6% டார்கெட்டிற்கு கீழ் தான் இருக்கிறது. இதனால் தேவை என்றால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கலாம் ஒரு தரப்பினர் சொன்னார்கள். ஆனால், அதிகரிக்கும் அமெரிக்க வரிகள், ரூபாய் மதிப்பு சரிவது ஆகியவற்றால் ஏற்படும் சிக்கல்கள் வட்டி குறைப்பைச் சாத்தியமில்லாத ஒன்றாக்கும் என மற்றொரு தரப்பினர் சொன்னார்கள். இந்தச் சூழலில் தான் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது.
முன்னதாக இது தொடர்பாக அகுயிட் ரேட்டிங்ஸ் & ரிசர்ச்சின் நிர்வாக இயக்குநர் சங்கர் சக்ரவர்த்தி பிரபல ஆங்கில ஊடகத்திடம் கூறுகையில், "ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்கும் என்றே நினைக்கிறேன். பணவீக்கம் டார்கெட்டிற்கு கீழேயே உள்ளது. ஆனாலும், ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்ற சூழல் உருவானது போலத் தெரியவில்லை" என்றார்.
வல்லுநர்கள் சொல்வது என்ன
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி அவர் கூறுகையில், "இந்த நிதியாண்டின் முதல் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8% ஆக இருந்தது. அரசு செலவினம் மற்றும் கிராமப்புறத் தேவைகள் அதிகரிப்பால் இந்த வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது. நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.5ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தனியார் முதலீடு பெரியளவில் இல்லை. நகர்ப்புறங்களில் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கிறது. இதை எல்லாமும் கூட ரிசர்வ் வங்கி கருத்தில் கொண்டே முடிவு எடுக்கும்" என்றார்.
ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன
ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்குக் கடன் வழங்கும் வட்டி விகிதம் தான் ரெப்போ விகிதமாகும். 6.5%ஆக இருந்த ரெப்போ விகிதம், இந்தாண்டு தொடக்கத்தில் 5.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டால் நமது கடன் வட்டி குறையும். அதாவது நாம் செலுத்தும் இஎம்ஐ குறையும். அதேநேரம் நமது சேமிப்புக் கணக்குகளில் கிடைக்கும் வட்டியும் குறையும். மறுபுறம் ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால் நாம் செலுத்தும் கடன் இஎம்ஐ தொகையும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications