ஜம்முவில் பிரதமர் மோடி கூட்டத்துக்கு அருகே வெடித்தது ' ஆர்.டி.எக்ஸ்.வெடிகுண்டுதான்'.. பகீர் தகவல்
டெல்லி: ஜம்மு யூனியன் பிரதேசம் சம்பா மாவட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் இருந்து 12 கி.மீ. தொலைவில் ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுதான் வெடித்ததாக தற்போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த போது அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு அம்மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது. ஆனால் 2019-ல் இந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலமும் ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக கூறுபோடப்பட்டன.

இதன்பின்னர் பிரதமர் மோடி, ஜம்மு யூனியன் பிரதேசத்துக்கு முதல் முறையாக கடந்த 24-ந் தேதி பயணம் மேற்கொண்டார்.பிரதமர் மோடி கடந்த 24-ந் தேதியன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சம்பா மாவட்டம் பாலி பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார்.
அக்கிராமத்தில் 500 கிலோ வாட் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும் ரூ20,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீரில் 175-க்கும் மேற்பட்ட மத்திய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. பெண்கள், ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினரே இதன் மூலம் பெரும் பயனடைந்துள்ளனர். வால்மீகி சமுதாயங்கள் பல தசாப்தங்களாக காலில் கட்டப்பட்டிருந்த சங்கிலியிலிருந்து விடுபட்டுள்ளன. இன்று ஒவ்வொரு சமூகத்தின் மகன்களும் மகள்களும் தங்கள் கனவுகளை நனவாக்குகிறார்கள். ஜம்மு-காஷ்மீரில் பல ஆண்டுகளாக இடஒதுக்கீட்டின் பலனைப் பெறாதவர்களும் இப்போது இடஒதுக்கீட்டின் பலனை பெறுகிறார்கள் என கூறியிருந்தார். அத்துடன் ஜம்மு- காஷ்மீர் பிராந்தியங்களை இணைக்கக் கூடிய பனிஹல்-காசிகுண்ட் சுரங்கப் பாதையையும் பிரதமர் மோடி திறந்த வைத்தார். இந்த சுரங்கப் பாதை ரூ3,100 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டது.
அதேபோல் ரத்லே மற்றும் க்வார் நீர்மின் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கிஷ்த்வார் மாவட்டத்தில் செனாப் ஆற்றில் சுமார் 5300 கோடி ரூபாய் செலவில் 850 மெகாவாட் திறன் கொண்ட ரத்லே நீர்மின் திட்டம் கட்டப்படும். 540 மெகாவாட் திறன் கொண்ட க்வார் நீர்மின் திட்டம் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றில் ரூ 4500 கோடி மதிப்பில் நிறுவப்படும். இரண்டு திட்டங்களும் பிராந்தியத்தின் மின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும். நீர்நிலைகள் புத்துயிர் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில், அம்ரித் சரோவர் என்ற புதிய முயற்சியையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விடுதலையின் அமிர்தப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை மேம்படுத்தி புத்துயிர் அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதமர் மோடியின் வருகைக்கு முன்னதாக பயங்கரவாதிகள் ஒரு சில இடங்களில் தாக்குதல்கள் நடத்தினர். இதனையடுத்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர் 4 பயங்கரவாதிகளை அடுத்தடுத்து சுட்டுப் படுகொலை செய்தனர்.பிரதமர் மோடி பாலி கிராம நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு சற்று முன்னதாக 12 கி.மீ தொலைவில் லாலியான் கிராம பகுதியில் பயங்கர வெடிசப்தம் கேட்டது.இது தொடர்பாக ஆய்வு செய்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய சம்பவமாக இது தெரியவில்லை என கூறினர். இதனால் அப்போது பதற்றம் ஓய்ந்தது.
ஆனால் தற்போது சம்பவ இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் லாலியான் கிராமத்தில் ஆர்.டி.எக்ஸ் வகை வெடிகுண்டுதான் வெடித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பயணத்தை சீர்குலைக்கும் வகையிலேயே வெடிகுண்டுகளை பயங்கரவாதிகள் வெடிக்க செய்திருப்பதாகவும் கருதப்படுகிறது. இந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications