மோடி ஒரு மகாபுருஷ்.. சினிமாவில் தொடர் தோல்வி.. அரசியல் அவதாரம் எடுக்கும் கங்கனா.. பாஜகவுக்கு தூது!
டெல்லி: 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட தயாராக இருப்பதாக நடிகை கங்கனா ரனாவத் அறிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்துகளுக்கு பெயர்போனவர். பாலிவுட்டில் நிலவி வரும் நெப்போட்டிசத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் கங்கனா ரனாவத், வலதுசாரி ஆதரவாளர் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர்.
இதனால் இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அதிரடியாக மற்றும் சர்ச்சையான கருத்துகளை தொடர்ந்து கூறி வருகிறார். அதிலும் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளராகவும், சாவர்க்கரை வழிகாட்டியாகவும் தேர்ந்தெடுத்து பயணித்து வருகிறார்.

அரசியலில் கங்கனா ரனாவத்
இதனால் நடிகை கங்கனா ரனாவத் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 2024ம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடத் தயாராக இருப்பதாக கங்கனா ரணாவத் அறிவித்துள்ளார்.

அரசியல் ஆர்வம்
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை கங்கனா ரனாவத் தனது எதிர்கால திட்டங்கள் பற்றியும், இமாச்சலப் தேர்தல், பிரதமர் மோடி - ராகுல் காந்தி இடையிலான போட்டி என பல்வேறு விவகாரங்கள் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவையாற்ற தயாரா என்ற கேள்விக்கு, அனைத்து வகையிலும் மக்களுக்கான சேவையில் ஈடுபட எப்போதும் தயாராகவே இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

பாஜக வேட்பாளர்?
தொடர்ந்து அரசியலில் நுழையும் திட்டம் பற்றிய கேள்விக்கு, மக்கள் விரும்பினால் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிடத் தயாராக இருக்கிறேன். பாஜக மேலிடம் தனக்கு சீட் கொடுத்தால், நிச்சயம் ஆவலாக இருக்கிறேன் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

ராகுல் - மோடி
தொடர்ந்து ராகுல் காந்தி - நரேந்திர மோடி பற்றிய கேள்விக்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி போட்டியாளர்கள் என்பது வருத்தம் அளிக்கிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தனக்கு யாரும் இணையான போட்டியாளர் இல்லை என்பது தெரியும். ஏனென்றால் பிரதமர் நரேந்திர மோடி மகாபுருஷ் என்று புகழ்ந்தார்.

இமாச்சல் சட்டமன்றத் தேர்தல்
பின்னர் இமாச்சலப் பிரதேசத் தேர்தல் பற்றிய கேள்விக்கு, இமாச்சல் மக்கள் ஆம் ஆத்மி கட்சி அளிக்கும் பொய் வாக்குறுதிகளுக்கு மயங்க மாட்டார்கள். அவர்களுக்கு காய்கறிகளை, அவர்களே விவசாயம் செய்து விளைவிக்கிறார்கள். அதனால் இமாச்சல் தேர்தலில் இலவசங்கள் அறிவிக்கிறோம் என்ற வாக்குறுதியால் எந்த பலனும் இருக்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.

சினிமாவில் தொடர் தோல்வி
அண்மையில் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகிய தலைவி, தாக்கத் ஆகிய திரைப்படங்கள் பெரும் தோல்வியையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தின. அதிலும் தாக்கத் திரைப்படம் ரூ.80 கோடி செலவில் உருவாகிய நிலையில், வெறும் ரூ.3 கோடி மட்டுமே வசூலித்தது. இதனால் அடுத்ததாக எமர்ஜென்சியை மையமாக வைத்து உருவாகும் படத்தை இயக்கி, நடித்து வருகிறார்.

சினிமாவுக்கு முழுக்கு?
சினிமாவில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால், அண்மைக் காலமாக கங்கனா ரனாவத் அரசியலில் ஆர்வம் காட்டி வந்தார். தற்போது வெளிப்படையாகவே பாஜக சார்பில் போட்டியிட தயார் என்று அறிவித்துள்ளார். இதனால் விரைவில் சினிமாவுக்கு முழுக்கு போடுவார் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications