பாஜக கூட்டணி வெற்றி பெற காரணம் என்ன? வாஜ்பாய் முன்னாள் உதவியாளர் சொல்லும் முக்கியமான 'பாயிண்ட்'
Recommended Video
டெல்லி: மோடி அரசுக்கு மக்கள் மீண்டும், வாய்ப்பு வழங்க என்ன காரணம் என்பது பற்றி, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உதவியாளர் சுதீந்திர குல்கர்ணி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில், பெரும்பான்மைக்கு தேவைப்படும் 272 தொகுதிகளையும் தாண்டி, 339 தொகுதிகள் வரை சென்றுவிட்டது பாஜக கூட்டணி.
மீண்டும் ஒருமுறை மோடி அரசுக்கே மக்கள் வாக்களித்துள்ளனர். இதற்கான பின்னணி என்ன என்ற விளக்கத்தை 2004ல் பிரதமராக இருந்த வாஜ்பாய் உதவியாளர் சுதீந்திரா குல்கர்ணி தெரிவித்துள்ளார்.
மோடி திரைப்படத்தில் நடித்த விவேக் ஓபராய்க்கு கொலை மிரட்டல்... போலீஸ் பாதுகாப்பு!
மோடியை விட்டால் ஆள் இல்லை
டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில், மோடிக்கு எதிராக வேறு ஸ்ட்ராங்கான முகம் இல்லை. மோடியை விட்டால் எந்த தலைவருக்கு ஓட்டு போட முடியும் என்ற கேள்விதான் மக்கள் மனதில் இருந்தது. இது ஒரு முக்கிய காரணம்.
இந்து ஓட்டுக்கள்
மேலும், இந்துக்கள் மத்தியில் பாஜக செலுத்திய தாக்கமும், மோடி அரசை மீண்டும் தேர்ந்தெடுக்க வைக்க காரணம். ஆனால், இந்துக்கள் எதிர்பார்ப்பை, பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் மோடிக்கு ஏற்படும். மதசார்பற்ற ஒரு நாட்டில், இதை எப்படி அவர் செய்யப்போகிறார் என்பது அடுத்த சவாலாக இருக்கும்.
புல்வாமா பதிலடி
மற்றொரு முக்கியமான காரணம், தேர்தல் நெருங்கும்போது, புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு அரசு அளித்த பதிலடி. வலுவான பதிலடி கொடுத்துள்ளோம் என பாஜக அரசு மக்கள் மத்தியில் ஒரு இமேஜை கொடுத்தது. இது முக்கியமான நேரத்தில், கூடுதல் பலனை பாஜகவுக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்குள் தாக்குதல்
கடந்த பிப்ரவரி மாதம், காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் சென்று தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை தாக்கியழித்ததாக அரசு அறிவித்தது. குறிப்பிடத்தக்கது.