ஹை அலர்ட்.. சிவப்பு நிற ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரை தீவிரமாக தேடும் போலீஸ்!
டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிவப்பு நிற ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இக்கார் ஹரியானாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த கார் தொடர்பாக நாடு முழுவதும் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. டெல்லி எல்லை சோதனைச் சாவடிகளை இந்த கார் கடந்திருக்கிறதா? என்று சிசிடிவி கேமராவை கொண்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் பஹல்காமில் நடந்த மற்றொரு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது. தேடப்பட்டு வந்த எஸ்யூவி கார், ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்த டாக்டர் உமர் உன் நபி என்பவருக்குச் சொந்தமானது.
விசாரணையில், உமர் உன் நபி ஒரு பயங்கரவாதக் குழுவின் உறுப்பினராக இருந்துள்ளார் என்பதும், உளவுத் துறைகளின் அழுத்தம் காரணமாக அவர் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார் என்பதும் தெரியவந்துள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில காவல்துறையினர் வாகனத்தையும், சந்தேக நபர்களையும் கண்டுபிடிக்க டெல்லி போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அல்-ஃபலா பல்கலைக்கழகம், சந்தேக நபருடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பகிரங்கமாக அறிவித்துள்ளதுடன், விசாரணை அதிகாரிகளுடன் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications