எலக்சன் முடிந்த உடனேயே 'கர்நாடகா' பாணி ஆட்சி... மமதா தலைமையில் மாநில கட்சிகள் 'வெயிட்டிங்'
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே 'கர்நாடகா' பாணியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்துவிடுவது என்பதில் மாநில கட்சிகள் தீர்மானமாக இருக்கின்றன.
லோக்சபா தேர்தல் முடிவுகள் மே 23-ல் வெளியாகின்றன. இத்தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் அமையவே வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது.
பாஜக இம்முறை பெரும்பான்மையை பெற முடியாத நிலைமை உருவாகும். காங்கிரஸ் கட்சி கணிசமான இடங்களைக் கைப்பற்றக் கூடும்.
அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பிஜூ ஜனதா தள், திமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சிகள் புதிய அரசை தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கும். மாநில கட்சிகளை வளைத்துப் போட்டு கூட்டணி அரசாங்கத்தை பாஜக அமைக்க முயற்சிக்கும்.
பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பாஜக மலைபோல் நம்பும் தென்மாநில கட்சிகள்... லிஸ்ட்டில் திமுகவும்!
ஆனால் பாஜகவுக்கு அப்படி ஒரு வாய்ப்பையே தந்துவிடக் கூடாது என்பதில் மமதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மும்முரமாக இருந்து வருகின்றனர். இது தொடர்பாக மாநிலக் கட்சித் தலைவர்களிடம் மமதா பானர்ஜி தொடர்ந்து பேசி வருகிறாராம்.
தேர்தல் முடிவுகள் வந்த உடனேயே கர்நாடகாவைப் போல அதாவது அதிக இடங்களை பெற்ற காங்கிரஸ் ஆதரவுடன் புதிய ஆட்சி ஒன்றை அமைத்துவிடுவது என்பதுதான் மமதாவின் திட்டம். தங்களது அணியில் இருந்து பாஜக பக்கம் மாநில கட்சிகள் போய்விடக் கூடாது என்பதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி தக்க வைக்கிறாராம் மமதா பானர்ஜி.